லண்டனில் ஸ்டாலின் - உதயநிதி போடும் மெகா பிளான்! மொத்தமாக தூக்கப்படும் தலைகள்? சேகர் பாபுவிற்கு செக்
சென்னை: முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் லண்டன் சென்றுள்ள நிலையில், அங்கே கட்சி தொடர்பாக முக்கியமான நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், யாரும் எதிர்பாராத அரசியல் திருப்பமாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர, திமுக எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு தள்ளப்பட்டது. இரண்டாவது முறை ஆட்சி அமைக்கும், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைக்கப்படும் என்று நம்பிக்கையாக இருந்த திமுகவிற்கு இந்த தோல்வி பலத்த அடி கொடுத்தது.

குறிப்பாக, சென்னை மற்றும் தென் மாவட்ட கோட்டைகளில் விழுந்த பலத்த அடி, அக்கட்சியின் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சியை முற்றிலும் புனரமைக்கப் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது அவரது லண்டன் பயணம் தமிழக அரசியலில் பெரும் உற்றுநோக்கலாக மாறியுள்ளது.
ஸ்டாலின் ஆலோசனை
சமீபத்தில் திமுகவினரின் செயல்பாடுகள் தொடர்பாக ஸ்டாலினுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மகன், மருமகன், பொருளாளரிடம் கலந்தாலோசனை நடத்திய ஸ்டாலின், தேர்தலுக்காக ஒவ்வொரு அமைச்சரிடமும் குறிப்பிட்டத் தொகையை கொடுத்திருந்தோம். அப்படியிருந்தும் எப்படி இந்த தோல்வி ? என்று தான் முதலில் ஆரம்பித்துள்ளார் ஸ்டாலின். அதற்கு சபரீசன், ''ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நம்மை ஏமாற்றியது ஒரு புறம் என்றால், அமைச்சர்களும் மா.செ.க்களும் நம்மை ஏமாற்றியது மற்றொரு புறம். அதிகாரிகளை விட்டுத்தள்ளுங்கள். ஆனால், அமைச்சர்களும் மா.செ.க்களும் ஏமாற்றியதுதான் ஜீரணிக்க முடியவில்லை'' என்று ஆதங்கப்பட்டுப் பேசியுள்ளார்.
அப்போது பேசிய உதயநிதி, ''எனக்கும் இப்படிப்பட்ட தகவல்கள்தான் கிடைத்துள்ளது அப்பா. அமைச்சர்கள் பலரும் அவரவர் தொகுதியில் அவர் ஜெயிக்க வேண்டும் என்பதில் தான் அக்கறைக் காட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகளில் கட்சியினரை ஜெயிக்க வைக்க முயற்சிக்கவில்லை. அவர் ஜெயித்தால் நமக்கு போட்டியாக வந்துவிடுவாரோ? இவர் ஜெயித்தால் போட்டியாக வந்து விடுவாரா? என்று திட்டமிட்டு, அரசியல் செய்துள்ளனர். எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என பகிர்ந்தளித்து ப்ளான் போட்டுக் கொடுத்தோமோ அதன் படி செலவு செய்யவில்லை. எல்லாத்தையும் அமுக்கிக் கொண்டார்கள்'' என்று கோபத்துடன் சொல்லியிருக்கிறார்.
அப்போது,பொருளாளர் டி.ஆர்.பாலுவிடம், யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது ? என்று கேட்க, அவர் விபரமாகச் சொல்லியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார் ஸ்டாலின். காரணம், ஒவ்வொரு தொகையும் மிக கனமான தொகை. இதனையடுத்து, கொடுக்கப்பட்ட தொகையை சுருட்டிக்கொண்டவர்கள் என யார் யார் மீதெல்லாம் சந்தேகம் இருந்ததோ, அவர்களை தொடர்பு கொண்டு வறுத்து எடுத்துள்ளார் ஸ்டாலின்.
ஸ்டாலின் பயணம்
இந்த நிலையில்தான் தனது பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றார். அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் சென்றுள்ளார். இந்த 15 நாள் லண்டன் பயணத்தின் போது, வெறும் ஓய்வு மட்டுமல்லாமல், திமுகவின் எதிர்காலம் மற்றும் கட்சியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ஒரு மிக முக்கியமான திட்டத்தை மு.க.ஸ்டாலின் இறுதி செய்யப்போவதாக அறிவாலய வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
உதயநிதியுடன் லண்டனில் ரகசிய ஆலோசனை
கடந்த மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே, திமுகவில் தொகுதி வாரியாக ஏன் இந்த சரிவு ஏற்பட்டது என்பது குறித்து கள ஆய்வுக் குழுக்கள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. குறிப்பாக, கொளத்தூர் தொகுதி தோல்வி மற்றும் சென்னை மாவட்டங்களில் திமுகவின் வாக்கு வங்கி சரிந்தது குறித்து கடுமையான கோபத்தில் இருக்கிறார் ஸ்டாலின். இந்த தோல்விக்கு தேர்தல் வியூகம் மட்டுமே காரணமல்ல, பல மாவட்ட செயலாளர்கள் மற்றும் சீனியர் தலைவர்களின் அலட்சியமும், உட்கட்சி பூசல்களுமே முக்கிய காரணம் என்பது தலைமைக்கு கிடைத்த ரிப்போர்ட்.
தற்போது லண்டனில் உள்ள ஒரு விடுதியில் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் இந்த ரகசிய ரிப்போர்ட்களை வைத்து தீவிரமாக விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே இளைஞரணி மூலமாக தமிழகம் முழுவதும் வலுவான நெட்வொர்க்கை வைத்துள்ளதால், யாரை நீக்க வேண்டும், யாருக்கு புதிய பொறுப்புகளை வழங்க வேண்டும் என்ற பட்டியலை அவர் இறுதி செய்யவுள்ளார்.
திமுகவின் மிக முக்கியமான தூண்களாகக் கருதப்படுபவர்கள் அதன் மாவட்ட செயலாளர்கள் (மாவட்ட செயலாளர்கள்). ஆனால், தேர்தல் நேரத்தில் தவெக மற்றும் எதிர்க்கட்சிகளின் அலை வீசியபோது, அதைத் தடுக்கத் தவறிய பல சீனியர் மாவட்ட செயலாளர்களின் பதவிகள் இந்த முறை பறிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.
சென்னையில் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் தொடங்கி, தா.மோ.அன்பரசன், ஏ.வ.வேலு, மூர்த்தி, கே.என்.நேரு, கோவி செழியன், அனிதா ராதாகிருஷ்ணன், திட்டக்குடி கணேசன் என 22 மாஜி அமைச்சர்களுக்கு செம டோஸ் கொடுத்துள்ளார் ஸ்டாலின். அதேபோல மா.செ.க்களும் டோஸ் விழுந்துள்ளது. இதனால் இவர்கள் மீது கடுமையான ஆக்சன் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.














Click it and Unblock the Notifications