ஸ்டாலின் அளவுக்கு விஜய் இல்லையே! சைலண்ட் மோடில் முதல்வர்.. புலம்பும் தலைவர்கள்!
சென்னை: மதுரையில் அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு மேற்கொண்டது, மக்கள் தங்கள் பிரச்சனை குறித்து ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம் என்று சொன்னது.. இப்படி ஆளுநர் அடுத்தடுத்து தனது ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார். ஆனால், முதலமைச்சர் விஜய் இது குறித்து எதுவும் பேசாதது கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு விஜய்க்கு காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயுஎம்எல் மற்றும் விசிக ஆதரவு கொடுக்க காரணம்.. ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதால்தான்.

ஆனால், சமீப நாட்களில் ஆளுநர் செய்வதை எல்லாம் பார்க்கும்போது.. நடப்பது மக்கள் ஆட்சியா? அல்லது மக்கள் ஆட்சியா என்கிற கேள்வி எழுவதாக கூட்டணி கட்சிகள் பேச தொடங்கியுள்ளன.
ஆளுநரின் நடவடிக்கை
சவுராட்டிரா கல்லூரியில் பட்டமளிப்பு விழாவுக்காக ஆளுநர் அர்லேக்கர் இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரைக்கு வந்திருக்கிறார். மதுரை போனோமா.. மீனாட்சி அம்மனை பார்த்தோமா.. பட்டம் கொடுக்கும் விழாவில் பங்கேற்றோமா.. என்று இல்லாமல் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர், இதர அதிகாரிகளை கூப்பிட்டு ஆய்வு கூட்டம் நடத்தியிருக்கிறார். அரசு திட்டங்கள் சரியாக அமல்படுத்தப்படுகிறதா? என்று அதிகாரிகளிடம் துருவி துருவி கேள்வி கேட்டிருக்கிறார்.
சர்ச்சை பேச்சு
மட்டுமல்லாது சவுராஷ்டிரா கல்லூரி மாணவர்களிடம் பேசிய அவர், "வரும்போது வைகை ஆற்றை பார்த்தேன். ஆறு இருக்கிறது.. தண்ணீர் இல்லை. இதை சரி செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும். துப்பாக்கியை தூக்கிக்கொண்டு சண்டைக்கு போவது மட்டும் தேச பக்தி கிடையாது! நதிகளை பாதுகாப்பதும் தேச பற்றுதான். இந்த பிரச்சனை சரி செய்யாவிட்டால்.. ஆளுநர் மாளிகை நேரடியாக களமிறங்கும்" என்று கூறியிருக்கிறார்.
திமுக சரமாரி கேள்வி
மக்கள் ஓட்டு போட்டு ஒரு அரசை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அரசு இருக்கும்போது.. ஆய்வு மேற்கொள்ள ஆளுநர் யார்? தமிழகத்தில் என்ன ஆளுநர் ஆட்சியா நடக்கிறது? என்று திமுக காட்டமாக கேள்வி எழுப்பியது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது.. விசிக, இடதுசாரிகள் என தவெகவுக்கு சப்போர்ட் செய்த கட்சிகளும் இந்த விஷயத்தில் கொந்தளித்திருந்தன. விஷயம் சீரியஸாவதை உணர்ந்த அமைச்சர் நிர்மல் குமாரும், ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்தார்.
புதிய சர்ச்சை
சரி இத்தோடு பஞ்சாயத்து முடிந்துவிடும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோதுதான்.. புதிய சர்ச்சையை கிளப்பினார் பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர்! அதாவது மக்கள் தங்கள் பிரச்சனை குறித்து ஆளுநர் மாளிகையில் முறையிடலாமாம். முதலமைச்சரிடம் புகார் கொடுக்க தனிப்பிரிவு என்று ஒன்று இருக்கிறது.. அதுபோல ஆளுநரும் தனி பிரிவை உருவாக்கி.. மக்கள் பிரச்சனைகளை கேட்க இருக்கிறாராம். வாக்களித்த மக்களால் பிரச்சனைகளை உணரவும் முடியும்; தீர்வுகளை சொல்லவும் முடியும் என்றும், மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தவெக அரசுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் ஆளுநர் நேற்று பேசியிருந்தார்.
திமுக ஆட்சியில் இப்படி நடக்குமா?
இதையெல்லாம் பார்க்கும்போது.. தமிழகத்தில் ஆளுநர் ஆட்சிதான் நடக்கிறதோ? என்று சந்தேகம் எழுவதாக பல்வேறு தரப்பினரும் கேள்வி கேட்க தொடங்கியிருக்கின்றனர்.
இதே திமுக ஆட்சியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால்.. ஆட்டுக்கு தாடி எதுக்கு.. நாட்டுக்கு ஆளுநர் எதுக்கு என்று பட்டாசாய் வெடித்திருப்பார்கள் திமுக தலைவர்கள். ஆனால், தவெக ஆட்சியில் முதலமைச்சர் விஜய் இன்னும் எதுவும் பேசாமல் இருக்கிறார். இது கூட்டணி தலைவர்களை டென்ஷன் ஆக்கியிருக்கிறது.
ஆளுநரை போகிற போக்கில் விட முடியாது.. நாங்களே எவ்வளவுதான் சண்டை செய்வது! முதலமைச்சரை இந்த விஷயத்தில் கறாராக பேச சொல்லுங்க என்று தலைவர்கள் கொந்தளித்துள்ளனர்.














Click it and Unblock the Notifications