அமைச்சராகும் ஜான் ஆரோக்கியசாமி.. விஜய் போடும் மாஸ்டர் பிளான்.. முட்டுக்கட்டை போடும் 2 தலைகள்!
சென்னை: தமிழ்நாட்டு சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராவதற்கான முயற்சிகளில் ஜான் ஆரோக்கியசாமி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தவெகவின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி நேரடியாக ஆட்சி அதிகாரத்தில் ஈடுபட விரும்புவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இதற்கு தவெக உள்ளேயே சிலர் முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், விரைவில் சட்டசபை இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன. தவெக கட்சிக்கு அக்னிபரீட்சையாக இந்த இடைத்தேர்தல் அமைய உள்ளது. நடைபெற உள்ள சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் அனைத்திலும் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில்தான் ஒரு தொகுதியில் போட்டியிட்டு அமைச்சராக ஜான் ஆரோக்கியசாமி திட்டமிட்டு வருகிறாராம்.

இதுவரை திரைமறைவில் மட்டுமே செயல்பட்டு வந்த தவெகவின் முதன்மை அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, தற்போது நேரடியாக அதிகார மையத்தை நோக்கி நகர்வதுதான் கோட்டை வட்டாரத்தின் தற்போதைய ஹாட் டாபிக்.
மேடைகளில் தோன்றும் ஜான் ஆரோக்கியசாமி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஜான் ஆரோக்கியசாமியின் முகம் தவெகவின் பொது மேடைகளிலோ, ஆலோசனைக் கூட்டங்களிலோ பெரிய அளவில் தென்பட்டதில்லை. அவர்தான் ஆலோசகர் என்பது பலருக்கும் தெரியும்.. ஆனால் அவர் பொதுமேடைகளில் தோன்றியது இல்லை.
ஆனால், கடந்த சில நாட்களாக தவெகவின் மிக முக்கியமான உள்கட்சி மற்றும் அரசு சார்ந்த கூட்டங்களில் அவர் தொடர்ச்சியாகத் தோன்றி வருகிறார். சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டங்களிலேயே ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்கேற்றதாகக் கூறி, எதிர்க்கட்சியான திமுக மற்றும் பாஜக தரப்பில் ஆளுநரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகாரே வாசிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் என்ட்ரிக்கு பின்னணியில் ஒரு பெரிய அரசியல் ஸ்கெட்ச் இருப்பதாக தவெகவின் நிர்வாகிகள் கிசுகிசுக்கின்றனர்.
குறிவைக்கப்படும் இடைத்தேர்தல்: காலியாகும் தொகுதிகள்!
நம்பத்தகுந்த வட்டாரங்கள் மற்றும் அரசியல் உளவுத்துறைத் தகவல்களின்படி, ஜான் ஆரோக்கியசாமிக்கு தமிழக அமைச்சரவையில் ஒரு முக்கிய இலாகாவை வாங்க வேண்டும் என்ற விருப்பம் வலுவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. நிதித்துறை அல்லது முதல்வர் வசம் உள்ள உள்துறையை கைப்பற்ற அவர் திட்டமிட்டு வருகிறாராம்.
அவர் அமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டுமானால், சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். அதற்கு மிகச்சரியான வாய்ப்பாக வரவிருக்கும் தமிழ்நாட்டு இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி கிழக்கு: முதலமைச்சர் விஜய் தான் போட்டியிட்டு வென்ற இரண்டு தொகுதிகளில் (பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு) திருச்சி கிழக்கு தொகுதியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுகவிலிருந்து வந்த தொகுதிகள்: தேர்தல் முடிவுகளுக்குப் பின் தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களான எஸ். ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), பி. சத்யாபாமா (தாராபுரம்) மற்றும் இசக்கி சுப்பையா (அம்பாசிமுத்திரம்) உள்ளிட்டோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட காலி இடங்கள். விராலிமலை தொகுதி எம்எல்ஏவான சி. விஜயபாஸ்கர் (ஜூன் 16 அன்றும்), கரூர் தொகுதி எம்எல்ஏவான எம்.ஆர். விஜயபாஸ்கர் (ஜூன் 29 அன்றும்) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர்.
இந்த தொகுதிகளில் தவெகவுக்கு அதீத செல்வாக்குள்ள ஒரு பாதுகாப்பான தொகுதியில் ஜான் ஆரோக்கியசாமியை நிறுத்த திட்டமிடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த இடைத்தேர்தல் முடிவடைந்த கையோடு நடத்தப்படவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் அவருக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கப்படலாம் என்ற பேச்சு தவெகவின் டாப் லெவலில் ஓடிக் கொண்டிருக்கிறது. உள்துறை கிடைக்கவில்லை என்றால் தொழில்துறை அமைச்சரவை பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
எகிறும் உள்கட்சி அழுத்தம்: விஜய்க்கு நெருக்கடி
இருப்பினும், இந்த நகர்வு தவெகவிற்குள் அத்தனை சுலபமாக நடப்பதாகத் தெரியவில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகளும், சில பவர்ஃபுல் புள்ளிகளும் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, கட்சியின் தேர்தல் பணிகளில் முக்கியப் பங்காற்றிய இரண்டு முக்கிய தலைவர்களின் ஆதரவாளர் வட்டாரங்கள், ஜான் ஆரோக்கியசாமியின் இந்தத் திடீர் விஸ்வரூபத்தை முற்றிலுமாக எதிர்க்கின்றனர். "தேர்தல் நேரத்தில் திரைமறைவில் வியூகம் அமைத்துக் கொடுத்த ஒருவருக்கு, நேரடியாகக் கேபினட் அந்தஸ்து கொடுப்பது நியாயமல்ல; இது ஆரம்பத்திலிருந்தே கட்சிக்காகக் கொடி பிடித்து, தேர்தல் களத்தில் நின்று உழைத்த நிர்வாகிகளை அவமதிக்கும் செயல்" என்று அவர்கள் தங்களின் அதிருப்தியைப் புகைய விட்டுள்ளனர்.














Click it and Unblock the Notifications