சென்னையின் மிக முக்கிய இடத்தில்.. வருகிறது ராட்சச பேருந்து நிலையம்.. ரெடியான மாஸ்டர்பிளான்! எங்கே?
சென்னை: சென்னையில் கடந்த திமுக ஆட்சியில் நிறைய இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கி அம்பத்தூர் பேருந்து நிலையம் வரை கட்டப்பட்டன. தற்போது தவெக ஆட்சியிலும் இதேபோல் பேருந்து நிலையங்கள் கட்டப்பட உள்ளன.
ஏற்கனவே திமுக ஆட்சியில் கட்டப்பட்ட குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை தற்போதைய ஆட்சியில் திறப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு இடையில் வேளச்சேரி அருகே இன்னொரு புதிய பேருந்து நிலையமும் கட்டப்பட உள்ளது. சென்னை மாநகரிலேயே மிக முக்கியமான மற்றும் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சந்திப்புகளில் வேளச்சேரி விஜயநகர் சந்திப்பும் ஒன்று.

வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம்
தென் சென்னை மக்கள் தங்களின் அன்றாடப் பயணங்களுக்குப் பயன்படுத்தும் இந்த முக்கியப் பகுதியில், கடந்த பல ஆண்டுகளாகவே போக்குவரத்து நெரிசல் என்பது தீர்க்க முடியாத ஒரு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதற்கு மிக முக்கியக் காரணம், இங்குள்ள பேருந்து நிலையம் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி சாலையோரத்திலேயே தற்காலிகமாக செயல்பட்டு வருவதுதான். இதனால் மக்கள் பலரும் சாலை ஓரம் நின்று பேருந்துகளில் ஏறும் அவலம் இருந்தது. அதோடு இல்லாமல் சாலையை மறித்து நிற்கும் அளவிற்கு இட நெருக்கடியும் இருந்தது.
சாலையோரங்களில் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்ல வழியின்றி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல், பேருந்திற்காகக் காத்திருக்கும் பொதுமக்களும் அன்றாடம் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
நிரந்தர தீர்வாக வரும் பேருந்து நிலையம்
இந்த நிலைக்கு மிக விரைவில் ஒரு நிரந்தரத் தீர்வு காணப்படவுள்ளது. வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம் அருகே அமையவிருக்கும் புதிய பஸ் டெர்மினஸ் மற்றும் டெப்போ திட்டத்திற்கான பணிகளைப் பெருநகர சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கான டெண்டர்கள் விரைவில் கோரப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் திட்டம்:
வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பேருந்துகளை இயக்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களையவும் ஒரு புதிய பேருந்து நிலையத்தை உருவாக்க வேண்டும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் நீண்ட நாட்களாகவே திட்டமிட்டு வந்தது. இதற்காக வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள 6.67 ஏக்கர் காலி நிலத்தைத் தேர்வு செய்து, அங்கு ஒரு நவீன பேருந்து நிலையம் மற்றும் பணிமனை அமைப்பதற்கான விரிவான வரைபடத்தையும் எம்.டி.சி தயாரித்தது.
பேருந்து நிலையம் கட்டுவதில் சிக்கல்
இருப்பினும், போதிய நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால், இத்திட்டத்தை நேரடியாகச் செயல்படுத்த முடியாமல் எம்.டி.சி தவித்து வந்தது. இதையடுத்து, கடந்த மே 15-ஆம் தேதியன்று சென்னை மாநகராட்சிக்கு எம்.டி.சி நிர்வாகம் ஒரு கடிதம் எழுதியது. அதில், ரயில் நிலையம் அருகே ஒதுக்கப்பட்டுள்ள 6.67 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்தி, சென்னை மாநகராட்சியே இந்தத் திட்டத்தை முன்னெடுத்து நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை:
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கோரிக்கையை ஏற்று, சென்னை மாநகராட்சி இத்திட்டத்தைத் தனது கைகளில் எடுத்துள்ளது. அதாவது போக்குவரத்து கழகத்திற்கு பதிலாக சென்னை மாநகராட்சி இந்த பேருந்து நிலையத்தை கட்ட முடிவு செய்துள்ளது.
இந்த ₹36 கோடி மதிப்பிலான பஸ் டெர்மினஸ்-கம்-டெப்போ திட்டம் மூலம் வேளச்சேரி பகுதிக்கு புதிய பேருந்து நிலையம் கிடைக்கும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தற்போது தயாராகி வருகிறது. , இந்த திட்டத்தைப் பொது-தனியார் கூட்டணி முறையில் செயல்படுத்த உள்ளனர். விரைவில் இதற்கான டெண்டர்கள் கோரப்பட்டு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications