வீட்டில இருந்து தடுக்கி விழுந்தா பஸ் ஸ்டாப்! walking distance-ல் பேருந்து நிலையம்! சென்னை MTC முடிவு
சென்னை: சென்னை மக்களுக்கு 5 நிமிட தூரத்தில் பேருந்து வசதி செய்து தர மாநகர போக்குவரத்துக் கழகம் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வர போவதாக அறிவித்துள்ளது. அதாவது 400 மீட்டர் அல்லது வெறும் 5 நிமிட நடைப்பயண தூரத்திற்குள் பேருந்து வசதியை உருவாக்க போகிறார்களாம்.
சென்னை மாநகரப் போக்குவரத்து என்றாலே நம் நினைவுக்கு வருவது கூட்ட நெரிசலும், நீண்ட காத்திருப்பும்தான். இதனால்தான் சென்னை டிராபிக்கில் பயணிப்பது என்றாலே பலருக்கு அலர்ஜியாக இருக்கிறது. இதனால்தான் பெரியவர்கள் கூட சென்னையில் இருக்கும் மகன், மகள், உறவினர்கள் வீடுகளுக்கு கூட வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கே சென்றுவிடுகிறார்கள்.

அதிலும் பேருந்து பிரச்சினை பெரியதாக உள்ளது. அதாவது "சென்னையில 61% பேருக்கு வீட்டுக்கு பக்கத்துலயே பஸ் ஸ்டாப், மெட்ரோனு எல்லாமே இருக்கு. ஆனா, அதுல வெறும் 36% பேருக்கு மட்டும்தான் சரியான நேரத்துக்கு பஸ் கிடைக்குது!" - இப்படி ஒரு அதிர வைக்கும் தகவலைப் போட்டு உடைத்திருக்கிறது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் (MTC) புதிய ஆய்வு.
சென்னையின் போக்குவரத்து உள்கட்டமைப்பு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டியுள்ள இந்த ஆய்வின் சுவாரசியமான பின்னணி இதோ:
கால இடைவெளி
சென்னை பெருநகரப் பகுதி (CMA) முழுவதும் வசிக்கும் மக்களின் குடியிருப்புப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இரண்டு முக்கிய விஷயங்கள் ஒப்பிடப்பட்டன. ஒன்று, பஸ் ஸ்டாப் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? இரண்டு, அங்கு எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை பஸ் வருகிறது?
61% பேருக்கு பஸ் ஸ்டாப் அருகில்: சென்னைவாசிகளில் 61 சதவீதம் பேர் பஸ் ஸ்டாப், மெட்ரோ நிலையம் அல்லது புறநகர் இரயில் நிலையங்களில் இருந்து வெறும் 500 மீட்டர் (5 முதல் 10 நிமிட நடைதூரம்) தொலைவிற்குள்ளேயே வசிக்கிறார்கள்.
36% பேருக்கு மட்டுமே அடிக்கடி பஸ்: பஸ் ஸ்டாப் பக்கத்தில் இருந்தாலும், பீக் ஹவர்ஸில் 10 முதல் 15 நிமிட இடைவெளியில் தங்களுக்குத் தேவையான பஸ்களைப் பெறும் பாக்கியம் வெறும் 36% மக்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
மத்திய சென்னை Vs புறநகர்ப் பகுதிகள்
சென்னையின் மையப் பகுதிகளுக்கும், புதிதாக வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதிகளுக்கும் இடையே போக்குவரத்து வசதியில் மிகப்பெரிய பாகுபாடு இருப்பதை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
வசதியான மத்திய சென்னை: தி.நகர், மைலாப்பூர், சைதாப்பேட்டை போன்ற சென்னையின் மையப் பகுதிகளில் பஸ் ஸ்டாப்புகளும் அருகில் இருக்கின்றன, பஸ்களும் அடுத்தடுத்து வருகின்றன.
புறக்கணிக்கப்படும் புறநகரங்கள்: ஆனால், ஓஎம்ஆர் (OMR), ஈசிஆர் (ECR), ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஆவடியின் சில புறநகர்ப் பகுதிகளில் பஸ் ஸ்டாப்புகள் மட்டுமே இருக்கின்றன. அங்கு பஸ்கள் வர 30 முதல் 45 நிமிடங்களுக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.
புறநகரில் பல இடங்களில் பஸ் நிழற்குடைகள் (Shelters) கம்பீரமாக நின்றுகொண்டிருக்கின்றன. ஆனால், அந்த வழிகளில் பஸ்கள் இயக்கப்படுவதே இல்லை அல்லது மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்படுகின்றன. இதனால் இவை பெயரளவு பஸ் ஸ்டாப்புகளாகவே சுருங்கிவிட்டன.
மாநகரப் பஸ்கள் சரியான நேரத்திற்கு வராததால், பொதுமக்கள் தங்களின் தினசரி பயணத்திற்காகப் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியுள்ளது. ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் ஓலா, உபெர் போன்ற செயலிகளை நம்பியே மக்கள் தங்கள் பயணத்தை முடிக்க வேண்டியுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மாதாந்திரப் பயணச் செலவு எகிறுகிறது.
தீர்வு என்ன?
இந்தக் குறைபாடுகளைக் களைந்து, சென்னை போக்குவரத்தைச் சீரமைக்க MTC மற்றும் நகரத் திட்டமிடல் நிபுணர்கள் சில முக்கியப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.
புதிய வழித்தடங்கள் (Route Rationalization): சென்னையின் மையப் பகுதிகளில் கூட்டம் குறைவாக ஓடும் பஸ்களைக் குறைத்து, அதிகத் தேவையுள்ள புறநகர் மற்றும் ஐடி (IT) காரிடார் பகுதிகளுக்கு அந்தப் பஸ்களைத் திருப்பி விடுவது.
புதிய பஸ்கள் வருகை: இரண்டு பஸ்களுக்கு இடையேயான காத்திருப்பு நேரத்தைக் குறைக்க, புதிய சாதாரண பஸ்கள் மற்றும் மின்சார பஸ்களை (E-Buses) வாங்கும் பணியைத் தீவிரப்படுத்துவது.
ஜிபிஎஸ் தொழில்நுட்பம் (Data-Driven Scheduling): பழைய கால அட்டவணையைத் தூக்கிப் போட்டுவிட்டு, சென்னை இன்டெலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம் (ITS) வழங்கும் ஜிபிஎஸ் தரவுகளின் அடிப்படையில், எந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறதோ, அங்கு உடனுக்குடன் பஸ்களை இயக்குவது.
மெட்ரோ மற்றும் ரயில்களுடன் இணைப்பு: சென்னை மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் இருந்து மக்கள் இறங்கிய உடனே, அவர்கள் பிற இடங்களுக்குச் செல்ல ஏதுவாக MTC பஸ்களை 'ஃபீடர்' (Feeder Services) சேவைகளாக மாற்றி அமைப்பது.
பஸ் ஸ்டாப்புகளைக் கட்டுவது மட்டுமே சாதனையாகி விடாது; அந்த ஸ்டாப்பிற்குள் பஸ்கள் சரியான நேரத்திற்கு வந்து செல்வதை உறுதி செய்வதில்தான் உண்மையான வளர்ச்சி இருக்கிறது என்பதை MTC-யின் இந்த ஆய்வு உணர்த்தியிருக்கிறது. இந்த அதிரடித் திட்டங்கள் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பதே ஒட்டுமொத்த சென்னைவாசிகளின் எதிர்பார்ப்பு!












Click it and Unblock the Notifications