TNPSC: ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறையில் வேலை.. 839 பணியிடங்கள்! டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஜாக்பாட்
சென்னை: தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 839 காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு வேலை கனவுடன் காத்திருக்கக் கூடிய தேர்வர்களுக்கு பொன்னான அறிவிப்பாக இது பார்க்கப்படுகிறது. ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகள் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த தேர்வு அறிவிப்பினை பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. தமிழகத்தில் அரசு பணிக்காக காத்திருக்கும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் தேர்வு அறிவிப்பை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். டிஎன்பிஎஸ்சி ஒவ்வொரு ஆண்டும், ஆண்டு அட்டவணை வெளியிட்டு அதற்கேற்றார் போல் தேர்வு அறிவிப்பினை வெளியிட்டு வருகிறது.

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
அந்த வகையில், ஆண்டு அட்டவணையில் தெரிவித்திருந்தபடி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள பணிப்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் மற்றும் சாலை ஆய்வாளர் உள்ளிட்ட 56 பதவிகளில் 839 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விருப்பம் உள்ள தேர்வர்கள் வருகிற 17 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை யு.பி.ஐ. மூலமாக செலுத்தலாம். ஓ.எம்.ஆர்., கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
பணியிடங்கள் விவரம்:
சுரங்க முதலாள் (தமிழ்நாடு கனிம நிறுவனம்), இயக்கூர்தி ஆய்வாளர் நிலை 2, மீன்வள சார் ஆய்வாளர், உதவி மேலாளர், விடுதி கண்காணிப்பாளர், இளநிலை வரை தொழில் அலுவலர், சிறப்பு பணி பார்வையாளர், இளநிலை பயிற்சி அலுவலர் (மின் பணியாளர்) இளநிலை பயிற்சி அலுவலர் (கம்மியர் மின்சார வாகனம்) என 56 வகையான பதவியில் 839 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதியை பொறுத்தவரை, பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும். ஐடிஐ, டிப்ளமோ, பிஇ/ பிடெக் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு:
வயது வரம்பினை பொறுத்தவரை, 01.07.2026 அன்று தேதிப்படி கணக்கில் கொள்ளப்படும். தேர்வர்கள், அனைத்து பதவிகளுக்கும் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) துறையில் உள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பதவி மற்றும் இயக்கூர்தி ஆய்வாளர், நிலை-II நீங்கலாக) 18 வயதினை நிறைவு செய்திருக்க வேண்டும்.
தேர்வர்கள் இளநிலை பயிற்சி அலுவலர் (பதவிக் குறியீடு: 3617 முதல் 3648 மற்றும் 3773 முதல் 3783 வரை) பதவிக்கு 01.08.2026 அன்றும் மற்றும் இயக்கூர்தி ஆய்வாளர், நிலை-II (பதவிக் குறியீடு: 2119) பதவிக்கு 01.07.2026 அன்றும் 21 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். இனவாரியான உச்ச வயது வரம்பு மற்றும் வயது வரம்பு சலுகை பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும். அதிகபட்சமாக இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கு வயது வரம்பு 37 ஆக உள்ளது.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு (தாள் I & II), சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஒருமுறை பதிவுக்கு ரூ.150 கட்டணம் ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
வரும் 17 ஆம் தேதி முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு முடிவடையும் தேதி, அதாவது விண்ணப்பிக்க கடைசி நாள் 15.08.2026 ஆகும். விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் 19.08.2026 அன்று முதல் 21.08.2026 வரை ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://tnpsc.gov.in/document/tamil/CTS%20-%20Diploma-(Tamil).pdf















Click it and Unblock the Notifications