"மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர்.." வயநாடு நிலச்சரிவு.. கேரள அமைச்சர் சொன்ன பகீர் தகவல்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுரங்கம் கட்டுமான பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது இயற்கை பேரிடர் அல்ல, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர் என்று கேரள அமைச்சர்கள் ரமேஷ் சென்னித்தலா மற்றும் டி. சித்திக் குற்றம்சாட்டியுள்ளனர். பல முறை எச்சரித்தும் சுரங்கப்பாதை தோண்டும் பணியில் வெளியே எடுக்கப்பட்ட மண் முறையின்றி குவித்து வைக்கப்பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என்றும் சாடியுள்ளனர்
கேரள மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாகக் கேரளாவில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை தொடர்கிறது. அதன்படி வயநாடு மாவட்டத்தில் கோழிக்கோடு - மேப்பாடி இடையே அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதை திட்டப் பகுதியில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வந்தது.

கொட்டிய கனமழை
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 256 மி.மீ. மழை பதிவான நிலையில், மேனாட்சி பாலம் அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த மண் திடீரென சரிந்து சாலை மற்றும் பாலத்தை மூடியது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன், 6 பேர் காயமடைந்தனர். மேலும் இடிபாடுகளுக்குள் வேறு யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடித்து அவர்களை மீட்கவும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
மதிக்கவில்லை
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்துப் பேசிய கேரள வேளாண் துறை அமைச்சர் டி. சித்திக், "சுரங்கப்பாதை தோண்டும் பணியில் வெளியே எடுக்கப்பட்ட மண் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் அப்பகுதியில் கொட்டப்பட்டு இருந்தது. அந்த மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே பலமுறை உத்தரவிட்டிருந்தும், அதை ஒப்பந்த நிறுவனம் பின்பற்றவில்லை.
மேலும், திட்டப்பகுதிக்கு அருகில் வசித்த 8 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. சுரங்கப்பாதையில் இருந்து வெளியேறும் நீர் குறித்தும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்திருந்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை" என்று சாடினார்.
மனித தவறால் ஏற்பட்ட பேரிடர்
கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலாவும் கிட்டத்தட்ட இதே கருத்தைத் தான் கூறினார். இது தொடர்பாக அவர், "வயநாடு போன்ற சுற்றுச்சூழல் ரீதியாக மிக சென்சிடிவ்வாக உள்ள பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் போது தோண்டி எடுக்கப்படும் மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் என்பது அடிப்படை விதி. அதைச் செய்யாததால் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டும். மனித தவறால் ஏற்பட்ட பேரிடர் இது" என்றார்.
இதற்கிடையில் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் டிலிப் பில்ட்கான் நிறுவனம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது. திட்டம் அனைத்து முறையான பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தொழில்நுட்ப ரீதியாக எந்த தவறும் நடைபெறவில்லை என்றும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கடும் நடவடிக்கை
இந்த விபத்து தொடர்பாகக் கேரள முதல்வர் வி.டி. சதீசன் கூறுகையில், "பொதுப்பணித்துறை அமைச்சர் பி.கே. பஷீர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அங்கு கொட்டப்பட்டிருந்த மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் என்று முன்கூட்டியே ஒப்பந்த நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அந்த உத்தரவை நிறுவனம் பின்பற்றாததே இந்த விபத்துக்கு முக்கிய காரணம்" என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் சதீசன், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.














Click it and Unblock the Notifications