கூட்டணியை ஆதரித்துவிட்டு பொதுவெளியில் விமர்சனம் பண்ணுவதா? திருமாவை மறைமுகமாக அட்டாக் செய்த வைகோ
சென்னை: தவெக அமைச்சரவையில் இணைந்துவிட்டதாலேயே அந்தக் கூட்டணியில் இணைந்துவிட்டோம் என்று அர்த்தம் இல்லை எனவும் திமுகவுடன் நட்பில் இருக்கிறோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இந்த நிலையில், கூட்டணியை ஆதரித்துவிட்டு பொதுவெளியில் விமர்சனம் ஏன்? தினம் ஒரு பேட்டி எதுக்கு? என்று திருமாவளவனை பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் வைகோ பேசியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தவெக கூட்டணியில் இருந்து கொண்டே பொது வெளியில் விமர்சனம் செய்யக்கூடாது என்று கூட்டணி கட்சிகளுக்கு அறிவுறுத்தல் விடுப்பதாக கூறினார். விசிக தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவனின் பேட்டிகள் முன்னுக்கும் பின் முரணாக குழப்பமாக இருப்பதாக விமர்சனம் எழுப்பப்படும் நிலையில், திருமாவளவன் பெயரை சொல்லாமல் அவரை பற்றியே வைகோ பேசியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது. வைகோ பேச்சின் முழு விவரம்:-

ஆட்சியை கவிழ்த்து விடுவீர்களா?
5 மாதம்தான் இந்த ஆட்சி இருக்கும்.. கொஞ்ச நாளைக்குள் கவிழ்ந்துவிடும் என்று ஒரு 10, 15 நாளா சாபம் விட்டுக்கொண்டே இருக்காங்க.. கவிழ்த்து விடுவீர்களா? உங்களால் கவிழ்க்க முடியாது. மத்திய அரசின் ஏஜெண்ட் இங்கே வந்து உக்காந்து இருக்கிறார். அவர் பெயர் அர்லேகர். கேடு கட்ட கவர்னர். முன்பு இருந்த கவர்னரை விட மோசமான கவர்னர். அவர் கிட்ட போய், திமுகவினர் மனு கொடுத்து இருக்கிறார்கள்.
அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் சேருவதை நீங்கள் தடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் அமைப்பின் 356 ஐ பயன்படுத்தி டெல்லிக்கு அனுப்பி அந்த வேலையை செய்யுங்க என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். 356 வது பிரிவு என்பது ஒரு மாநில அரசை கலைப்பதற்கான பிரிவு. மாநில அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்ட போது அண்ணாவின் மாநில சுயாட்சி அழிக்கப்படுகிறது கொதித்து எழவில்லையா.
ரோட்டில் வந்து விமர்சனம் செய்ய மாட்டேன்
356 பிரிவே இருக்கக் கூடாது என்று கருணாநிதி சொல்லவில்லையா.. 100 தடவைக்கு மேல் நான் பார்லிமெண்டில் இது பற்றி பேசியிருக்கிறேன். 356 பிரிவை பயன்படுத்தலாம் என்று திமுக தரப்பில் இருந்து எப்படி சொல்லப்பட்டது. டிஸ்மிஸ் செய்யணும் என்று சொல்கிறீர்களா அப்படி எல்லாம் பண்ண முடியாது. கர்நாடக மாநிலத்தில் பொம்மை அரசு கலைக்கப்பட்ட போது கொடுத்த தீர்ப்பின்படி ஆட்சி எல்லாம் கலைக்க முடியாது. பெரும்பான்மையை கைப்பற்றி இந்த ஆட்சியை ஒருவேளை கவிழ்த்து விட்டீர்கள் என்றால் 180 இடத்தில் தவெக வெற்றி பெறும்.
நான் இருக்கிற கூட்டணிக்கு விசுவாசமாக இருப்பவன். கூட்டணியில் இருப்பதால் சகித்துக்கொண்டு இருந்தேன். அதில் என்ன தப்பு.. இப்போது தவெகவுடன் கூட்டணியில் உள்ளேன். இந்த அரசில் ஏதாவது தவறு இருக்கிறது என்றால் உடனே அமைச்சர்களுக்கு போன் பண்ணி சொல்வேன். முடிந்தால் முதல்வருக்கே போன் பண்ணி பேசுவேன். ரோட்டில் வந்து விமர்சனம் செய்ய மாட்டேன். கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளுக்கு அறிவுரை அல்ல.. 62 கால அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன்.
தினம் தினம் ஒரு பேட்டி ஏன்?
நீங்கள் குறை சொல்ல வேண்டும் என்றால் நேரா போய் மந்திரியிடம் சொல்லுங்க.. முதல்வரை சந்தித்து இதுஎல்லாம் சரியில்லை என்று சொல்லுங்கள். கூட்டணியில் இருந்து கொண்டே தினம் ஒரு பேட்டி ஏன்? கூட்டணியில் இருந்து கொண்டு ஆட்சியை ஆதரிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் மேலே குறை சொல்ல வேண்டும். இந்த ஆட்சியை எப்படியாவது விஜய்யிடம் இருந்து பறித்துவிட வேண்டும் என்று வெறி பிடித்து அலைகிறார்கள்.
இதுவரை வந்து கொண்டு இருந்த கஜானாவின் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன. கோடி கோடியாக வந்து கொட்டி குவித்துக்கொண்டு இருந்த களஞ்சியங்கள் மூடப்பட்டுவிட்டன. டாஸ்மாக்கில் வந்த கோடான கோடி ரூபாய் நிறுத்தப்பட்டுவிட்டது. மணல் கொள்ளையில் வந்த ஆயிரம் ஆயிரம் கோடி நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கு என்ன வழி.. எடப்பாடி முதல்வராக இருக்கட்டும். நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிறோம். இதை விட ஒரு அரசியல் தற்கொலை இருக்க முடியுமா? இந்த பாவத்தை எல்லாம் செய்யாதீங்க என்று நான் திமுகவிற்கு சொல்கிறேன்" என்றார்.














Click it and Unblock the Notifications