விஜய் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என சொன்னது ஏன்? வெளிப்படையாக சொன்ன திருமாவளவன்
சென்னை: விஜய்யின் தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம் என்ற தனது கருத்து தவெகவை மிரட்டுவதற்காக கூறவில்லை என தொல் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், தங்களின் அரசியல் சுதந்திரத்தை வெளிப்படுத்துவதற்காகவே அந்த கருத்தை தெரிவித்ததாக திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுவிட்டோம் என்ற காரணத்தினாலேயே அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்துவிட்டோம் என அர்த்தம் இல்லை. இன்னும் நாங்கள் தவெகவுடன் கூட்டணி அமைக்கவில்லை.

எந்த நேரத்திலும் வெளியேறலாம்
எந்த நேரத்திலும் தவெக அமைச்சரவையில் இருந்து நாங்கள் வெளியேறலாம். வர முடியாது என்பதற்கு என்ன இருக்கிறது. அப்படி அரசியல் செய்ய முடியும். அப்படி ஒரு நிலைப்பாட்டையும் எங்களால் எடுக்க முடியும்.." என்று பேசினார். திருமாவளவனின் இக்கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. ஏற்கனவே இந்த அரசு 6 மாதமாவது தாங்குமா என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இவரது கருத்து பூதாகரமாகியது.
இதற்கு அப்போதே விளக்கம் அளித்த அமைச்சர் வன்னியரசு, "ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது வேறு.. அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது என்பது வேறு. அமைச்சரவையிலிருந்து வெளியேறினாலும் ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவு நீடிக்கும் என்பது தான் திருமாவளவன் அவர்களின் கருத்து. இதில் உள்நோக்கம் கற்பிப்பது திரிபுவாதமாகும்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் விஜய் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என சொன்னது ஏன்? என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
தவெகவை மிரட்டுவதற்காக சொல்லவில்லை
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன் கூறியதாவது:- அமைச்சரவையில் இருந்து வெளியேறி விடுவோம் என்று சொன்னது தவெகவை மிரட்டுவதற்காக அல்ல.. அது எங்களுக்கான சுதந்திரம் அது என்பதை உறுதிப்படுத்துவதற்காக.. கேட்டால் பதவிக்காகத் தான் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம் என சில பேர் பேசுகிறார்கள். பதவியில் இருந்து வெளியேறி நின்றும், எங்களால் தவெகவுக்கு ஆதரவு தர முடியும். ஆட்சி கலையாது.. அந்த ஸ்பேஸ் அங்கே இருக்கிறது. அந்த இடைவெளி அங்கே இருக்கிறது.
பதவிக்காக ஒட்டிக் கொண்டார்கள். பதவி ஆசை உங்களுக்கு.. கருத்து முரண்பாடுகள் உள்ள கட்சியோடு நாங்கள் ஒட்டியிருந்தால் இந்த விமர்சனங்கள் சரி.. பாஜகவோடு எங்களுக்கு கருத்தியல் முரண்பாடுகள் உண்டு. அந்த கட்சியோடு நாங்கள் கூட்டணி வைத்து இருந்தால் நாங்கள் பதவிக்காக ஒட்டிக்கொண்டோம் என சொல்வதில் ஒரு அர்த்தம் உண்டு.. ஆனால், நாங்கள் உயர்த்தி பிடிக்கின்ற அம்பேத்கரை உயர்த்தி பிடிக்கிறார் விஜய்.. நாங்கள் உயர்த்தி பிடிக்கும் பெரியாரை, உயர்த்தி பிடிக்கிறார் விஜய்.. நாங்கள் பேசும் சமூக நீதியை நாங்களும் பேசுவோம் என உரக்க சொல்கிறார் விஜய்.. இதில் என்ன முரண்பாடுகள் இருக்கிறது.
அவர் நினைத்தால் அதிமுக ஆதரவை பெற்றிருக்க முடியும்
இப்படி இருந்தும் இன்னும் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.. இது குழப்பம் இல்லை.. இது தான் அரசியல் நுட்பம்.. இந்த அரசியல் நுட்பத்தை புரிந்துகொள்ளாதவர்கள் தான், திருமாவளவன் குழுப்புகிறார் என்று சொல்கிறார். அவன் குழப்பத்தில் இருந்துவிட்டு என்னை சொல்கிறான். நான் குழப்பவில்லை.. தவெக ஆட்சி அமைக்க இரண்டு இடம் தேவைப்பட்டது. அந்த இரண்டு இடம் கொடுத்தால் ஆட்சி அமைக்க முடியும் என்பதால் தான் நாங்கள் ஆதரவு கொடுத்தோம்.
அதிமுக ஆதரவை பெற்று இருக்கலாம்.. பாமக ஆதரவை பெற்று இருக்கலாம்.. ஆனால் அவர் இடது சாரிகளான கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்.எல் கட்சிகளின் ஆதரவை கேட்டு கடிதம் எழுதினார். வெளிப்படையாகவே ஆதரவு கேட்டார். அவர் நினைத்திருந்தால் அதிமுக ஆதரவை பெற்றிருக்க முடியும். பாமக ஆதரவை பெற்று மறுநாளே ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால் அவர் மதசார்பற்ற கூட்டணியின் ஆதரவு வேண்டும் என்பதற்காகவே எங்கள் ஆதரவை நாடினார்" இவ்வாறு திருமாவளவன் பேசினார்.















Click it and Unblock the Notifications