மேகதாது அணை: ஜூலை 15-ல் தமிழக எல்லை அடைப்பு போராட்டம்! தமிழ் படத்திற்கும் வாட்டாள் நாகராஜ் எதிர்ப்பு
பெங்களூர்: மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாட அமைப்புகள் வம்படியாய் பேசி வரும் நிலையில், வரும் 15 ஆம் வாட்டாள் நாகராஜ் போராட்டம் அறிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக - தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளி எல்லையில் முழு எல்லை அடைப்பு போராட்டம் நடைபெறும் என வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு துடியாய் துடிக்கிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனம் ஆகும் என்றும், காவிரி நீரை நம்பியிருக்க கூடிய விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசும் திட்டவட்டமாக உள்ளது. கர்நாடகாவில் முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்றதில் இருந்து மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

கர்நாடகாவின் அடாவடித்தனத்தை எப்பாடுபட்டாவது நிறுத்தியே தீருவோம் என்று தமிழ்நாடு உறுதியாய் உள்ளது. தமிழக சட்டமன்றத்திலும் மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடாக அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு எக்காரணம் கொண்டும் மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தமிழகத்தில் அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் கர்நாடக அமைப்புகளும் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் வம்படியாய் பேசி வருகிறது. இந்த நிலையில்தான், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக வாட்டாள் நாகராஜ் போராட்டம் அறிவித்துள்ளார். கர்நாடக சலுவாலி அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ் இது தொடர்பாக கூறுகையில், "மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஜூலை 15 ஆம் தேதி கர்நாடக - தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளி எல்லையில் முழு எல்லை அடைப்பு போராட்டம் நடைபெறும். தமிழ் திரைப்படங்கள் கர்நாடகத்தில் ஓடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications