26 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. இந்தியாவின் கச்சா எண்ணெய் சப்ளை இப்படி மாறிடுச்சே.. ஏன் முக்கியம்?
துபாய்: அமெரிக்கா ஈரான் இடையே நீடித்த மோதல் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். இந்த மோதல் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி கொள்கையையும் கூட பாதித்துள்ளது. இதன் காரணமாக 26 ஆண்டுகளில் இல்லாத ஒரு மிக பெரிய கொள்கை மாற்றம் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் நடந்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை நீடித்த போரும் பதற்றமும் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் சப்ளையையும் கடுமையாகப் பாதித்தது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பல உலக நாடுகள் தங்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி கொள்கையை மாற்றி அமைத்தன.

கச்சா எண்ணெய்
அதாவது இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதியில் இப்போது துபாய் ஓமன் வகை கச்சா எண்ணெய்யின் பங்கு தற்போது 20.60 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2001ம் ஆண்டு முதல் நமக்கு இறக்குமதி தொடர்பான டேட்டா இருக்கிறது. கடந்த 26 ஆண்டுகளில் துபாய் ஓமன் வகை கச்சா எண்ணெய்யின் இறக்குமதி இந்தளவுக்குக் குறைந்துள்ளது இதுவே முதல்முறை. அதேநேரம் மறுபுறம் பிரென்ட் வகை கச்சா எண்ணெய்யின் பங்கு 79.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஏப்ரலில் 61.02 சதவீதமாகவும், மே மாதத்தில் 70 சதவீதமாகவும், ஜூன் மாதத்தில் 71.02 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது..
காரணம் என்ன
ஈரான் மோதலின் போது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் மேற்கு ஆசியாவில் இருந்து வரும் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யா, அமெரிக்கா, வெனிசுலா மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஆரம்பித்தன. இதனால் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் மேற்கு ஆசிய நாடுகளின் பங்கு ஜூன் மாதத்தில் சுமார் 22 சதவீதமாக குறைந்துள்ளது. மோதலுக்கு முன்பு இது 60 முதல் 70 சதவீதம் வரை இருந்தது.
ரஷ்யா
இந்தியா தற்போது 41க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாலும், பிரென்ட் மற்றும் துபாய்-ஓமன் கச்சா எண்ணெய்கள் தான் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகிறது. ரஷ்ய கச்சா எண்ணெய் சர்வதேச எண்ணெய் சந்தைகளில் இடம்பெறவில்லை. இதனால் இந்தியா அவர்களிடம் இருந்து எந்தளவுக்குக் கச்சா எண்ணெய் வாங்குகிறார்கள் என்பது குறித்து துல்லியமான தகவல் இல்லை. இருப்பினும் ஜூன் 1 முதல் 19ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி தினசரி 26.6 லட்சம் பீப்பாய்களாக இருந்தது.
சுத்திகரிப்பு நிலையங்கள்
கச்சா எண்ணெய் உலகெங்கும் கிடைத்தாலும் கூட ஒவ்வொரு பகுதியில் கிடைக்கும் கச்சா எண்ணெய்யும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதை சுத்திகரிக்கும் முறையும் மாறுபடும். இந்திய சுத்திகரிப்பு நிலையங்களை பல்வேறு வகையான கச்சா எண்ணெய்களையும் சுத்திகரிக்கும் வகையில் தங்களது தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தியுள்ளன. இந்த நவீன சுத்திகரிப்பு நிலையங்கள் வெனிசுலா போன்ற நாடுகளிலிருந்து வரும் கனரக கச்சா எண்ணெய்யையும் கூட எளிதாக சுத்திகரிக்க முடியும்.
இந்தியா மட்டுமின்றி, ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகளுக்கு பதிலாக அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்க ஆரம்பித்து விட்டன.














Click it and Unblock the Notifications