யார் இந்த கோவை நீதிபதி சிவக்குமார்? டவாலி யாரும் பின்னாடி வராதீங்க.. இணையத்தை கலக்கும் எளிமைவாதி
கோவை: முதலமைச்சர் விஜய், தன் வீட்டிலிருந்தே சாப்பாடு கட்டி கொண்டு வந்து, தலைமைச் செயலகத்தில் சாப்பிடுவதாக செய்திகள் வெளிவந்தது நினைவிருக்கலாம். ஆனால், இங்கே ஒரு நீதிபதியும் அப்படித்தான் வியப்பை கூட்டி வருகிறார்.. இவரை பற்றின செய்திகள்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. கோவையை சேர்ந்த இந்த நீதிபதி யார்?
அதிகாரமும் அந்தஸ்தும் கைநிறைய இருந்தாலும், தலைக்கனம் இல்லாமல் எளிய மனிதர்களாக வாழ்பவர்களை இந்த உலகம் எப்போதும் உற்றுநோக்கிக் கொண்டே இருக்கிறது.

திருவண்ணாமலை கலெக்டர்
பந்தா இல்லாத இத்தகைய அதிகாரிகளின் எதார்த்தமான செயல்பாடுகள், சாமானிய மக்களை எளிதில் ரொம்பவே கவர்ந்து விடுகின்றன. அதனால்தான், தங்களின் எளிமையால் தனித்துத் தெரியும் மனிதர்கள் குறித்த செய்திகள், இணையத்தில் அடிக்கடி பேசுபொருளாகி வைரலாகி விடுகின்றன.
சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தின் 25-வது புதிய மாவட்ட ஆட்சியராக வந்தனா கார்க் முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.
அப்போது அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவிப்பதற்கும், பொறுப்புகளை முறைப்படி ஒப்படைப்பதற்கும் அந்த மாவட்டத்தின் முந்தைய ஆட்சியரான க. தர்பகராஜ் அங்கு உடனிருந்தார். புதிய கலெக்டராக பொறுப்பேற்ற வந்தனா கார்க், தன் முன்னால் நின்றிருந்த தர்பகராஜைப் பார்த்து, "உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே?" என்று ஒரு கேள்வியைக் கேட்க, அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் திகைத்துப் போயினர்.
நான்தான் கலெக்டர்
அப்போது சற்றும் பதற்றமடையாத முந்தைய ஆட்சியர் தர்பகராஜ், லேசாக புன்னகைத்தபடி, "நான்தான் கலெக்டர்" என்றார்.. தர்பகராஜின் இந்த பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்காத வந்தனா கார்க், "ஐயோ... சாரி சார்..." என சொல்லி தனது முகத்தில் கைகளை வைத்து வெட்கப்பட்டார். இதைக்கண்டு, அங்கிருந்த அரசு அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள் அனைவரும் சிரித்து விட்டார்கள்.
சிறிதும் பந்தா இல்லாமல், உயர் அதிகாரிகள் தங்களுக்குள் மிகவும் எளிமையாகப் பேசிக்கொண்ட இந்த வீடியோ பதிவு, சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரை நெகிழ வைத்தது.
கோவை நீதிபதி எளிமை
இப்படி, அதிகாரப் பந்தா எதுவும் இல்லாமல், தங்களின் எளிமையால் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் அதிகாரிகள் பலரும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், கோவையில் பணியாற்றி வரும் மாவட்ட நீதிபதி சிவக்குமார் என்பவரின் எளிய வாழ்வாதாரமும், அரசுப் பணியும் இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
53 வயதாகும் நீதிபதி பி.கே.சிவகுமார், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் இதற்கு முன்பு சேலம், கோவை, மேட்டுப்பாளையம், புதுக்கோட்டை உள்படப் பல்வேறு இடங்களில் மாஜிஸ்திரேட் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் திறம்படப் பணியாற்றியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், இவர் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, கோவை மாவட்ட 5-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இப்போது பணியாற்றி வருகிறார்.
டவாலி யாரும் வராதீங்க
நீதிபதி சிவக்குமார் தற்போதைய காலகட்டத்திலும் மிக எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து காட்டி வருகிறார். காஸ்ட்லி வாகனங்களை பயன்படுத்தாமல், தினமும் கோர்ட்டுக்கு தனது சைக்கிளிலேயே வருவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். வீட்டிலிருந்து மதிய சாப்பாடு எடுத்து வரும் அவர், தனியாக உட்கார்ந்து சாப்பிடாமல் நீதிமன்ற ஊழியர்களுடன் ஒன்றாக உட்கார்ந்து எந்த பாகுபாடும் இல்லாமல் உணவு சாப்பிடுகிறாராம்.
நீதிமன்ற வளாகத்தில் எப்போதுமே தனியாக நடந்து செல்லும் குணம் கொண்டவரான இவர், தனக்கு பின்னால் டவாலி அங்கி அணிந்து சேவகர்கள் யாரும் தன்னுடன் வருவதை ஒருபோதும் விரும்பியதே இல்லையாம்.. நீதிபதியின் இந்த எதார்த்தமான செயல்பாடுகள், அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் மக்களுடன் எவ்வளவு எளிமையாகப் பழக வேண்டும் என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணமாகி உள்ளது..!!!














Click it and Unblock the Notifications