வயநாடு நிலச்சரிவின் ஷாக் பின்னணியில் சுரங்கப்பணி? உயிர் தப்பியவரின் ஷாக் தகவல்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் இன்று திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 பேர் பலியான நிலையில் இன்னும் பலர் மாயமாகி உள்ளனர். இந்நிலையில் தான் நிலச்சரிவுக்கு அந்த பகுதியில் மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் நிறுவனம் தான் காரணமாக இருக்கலாம் என்று உயிர் பிழைத்தவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கேரளா மாநிலம் வயநாட்டில் இன்று திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் கல்லடி அருகே மீனாட்சி மேம்பாலத்தின் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் அனக்கொம்பொயில் -மேம்பாடி சுரங்க ரோடு திட்டம் நடந்து வருகிறது.

மலையை குடைந்து இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தையொட்டி இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 பேர் பலியாகி உள்ள நிலையில் இன்னும் பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலச்சரிவுக்கு அங்கு பெய்த கனமழை காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் நினைக்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 264 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஏற்கனவே நிலச்சரிவு அபாயம் உள்ள இடம் என்பதால் கனமழையால் இந்த துயர சம்பவம் நேர்ந்து இருக்கலாம் என்று அதிகாரிகள் நினைக்கின்றனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் சுரங்கப்பாதை அமைக்கும் நிறுவனம் தான் நிலச்சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை இன்றைய நிலச்சரிவில் நூலிழையில் உயிர் பிழைத்த ஹம்சா மந்திக்கரா முன்வைத்துள்ளார். இதுபற்றி ஹம்சா மந்திக்கரா கூறியதாவது:
''சுரங்கப்பாதை தோண்டும்போது அதிகப்படியான மண் வெளியே எடுக்கப்பட்டது. இந்த மண்ணை 40 ஏக்கர் பரப்பளவில் குவித்து வைத்துள்ளனர். இது பார்க்க செயற்கையான மலை போல் காட்சியளித்தது. இந்த பகுதியில் தொடர் மழை பெய்தது. இதனால் இந்த மண்குவியல் சரிந்து விபத்து ஏற்படலாம் என்று நாங்கள் பலமுறை கட்டுமான நிறுவனத்திடம் கூறி எச்சரிக்கை செய்தோம். ஆனால் அவர்கள் அந்த மண் குவியலை அப்புறப்படுத்தவில்லை. எங்களின் குரலுக்கு செவிசாய்க்கவே இல்லை.
நிலச்சரிவு ஏற்பட்டபோது நான் அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தின் அருகே தான் நின்றேன். திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. திரும்பி பார்த்த அடுத்த நொடியில் மண்குவியல் சரிந்து பேருந்து நிறுத்தத்தை அப்படியே மூடியது. தண்ணீர் கலந்து சேறாக அந்த மண்குவியல் பனிச்சரிவு போல் கீழ்நோக்கி சரிந்தது. நான் அதிர்ஷ்டவசமாக தப்பினேன்'' என்றார்.
இதுபற்றி ஜபீர் ஷா என்பவர் கூறுகையில், ''மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் சில கட்டுமானங்கள் மட்டுமே இருந்தன. இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மண்சரிவு நடந்து சில நொடியிலேயே மேப்பாடி - சூரல்மலா சாலையின் ஒரு பகுதி, மசூதி, வீடு ஆகியவை மண்ணில் புதைந்தன'' என்றார். மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில்,''இந்த நிலச்சரிவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் நிறுவனம் தான் காரணமாக இருக்கலாம். அவர்கள் குவித்து வைத்த மண்குவியல் தான் சரிந்து பேரிடர் நிகழ்ந்துள்ளது. இதுபற்றி அதிகாரிகள் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications