பேஸ்புக்கில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பதிவு.. கோவை திமுக நிர்வாகிகள் கைது
கோவை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி உடைந்துவிட்டது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. திமுக, தவெக இடையே கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது. முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசியதாக திமுக நிர்வாகிகள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், தமிழகத்தில் திமுக தவெக இடையே தான் போட்டி என்று தவெக தலைவர் விஜய் கூறினார். அப்போது திமுக மற்றும் அதிமுக தவெகவை பொருட்டாக எடுக்கவில்லை. பரஸ்பரம் மாறி விமர்சித்து வந்தனர். தமிழகத்திற்கும், டெல்லிக்குமான தேர்தல் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார். தேர்தல் முடிவில் தவெக ஆட்சிக்கு வந்தது. இது திமுக, அதிமுக இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திமுக தவெக மோதல்
"தேர்தலில் நமக்கான எதிரி யார் என்பதை நிர்ணயிக்க தவறிவிட்டோம்" என்று திமுக தலைவர்கள் கூறி வருகிறார்கள். தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களம் தவெக Vs திமுக என்று மாறியுள்ளது. தவெக ஆட்சி நீடிக்காது என்று திமுக கூறி வருகிறது. தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்கு திமுக சதி செய்வதாக தவெக புகார் கூறி வருகிறது. தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய புகாரில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தவெக ஆட்சிக்கு எதிராக திமுக போராட்டத்தில் இறங்கியுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரை குரும்பபாளையம் பகுதியில் புதிய நியாய விலை கடை திறப்பதற்கு பிளக்ஸ் பேனர் வைப்பது தொடர்பாக திமுக மற்றும் தவெகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திமுக நிர்வாகிகள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக புகார் எழுந்தது.
முதலமைச்சர் குறித்து அவதூறு
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகி பாலாஜி, திமுக நிர்வாகிகள் மீது மதுக்கரை காவல் துறையில் புகார் அளித்தார். இந்த புகார் அடிப்படையில் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த திமுகவினர் விஷ்ணுபிரபு , மனோஜ்குமார் , மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் மீது மதுக்கரை போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். திருச்சியில் இருந்த விஷ்ணுபிரபு, மனோஜ்குமார் ஆகிய இருவரை மதுக்கரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மணிகண்டன் என்பவர் தலைமறைவாக உள்ளார். தலைமறைவாக இருக்கும் மணிகண்டனை மதுக்கரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தவெக அதிகாரத்தை பயன்படுத்தி தவறாக செயல்படுவதாக திமுகவினர் புகார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications