குறைக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை? ஒரு நொடி யோசித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் கொடுத்த பதில்
டெல்லி: வளைகுடா போர் சமயத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்திற்குப் போனது. இதனால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது. இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது. இப்போது போர் முடிந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாகச் சரிந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை எப்போது குறையும் என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
வளைகுடாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வந்த மறுநொடியே கச்சா எண்ணெய் விலை தாறுமாறாகக் குறைய ஆரம்பித்தது. இதனால் பல உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. இந்தியாவிலும் தனியார் நிறுவனமான நயாரா தனது விலையைக் குறைத்துள்ளது.

பெட்ரோல் விலை குறைப்பு?
இதற்கிடையே இந்தியாவில் அதிகளவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போதைய சூழலில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு சுமார் 70 டாலராக சரிந்துள்ளது. இந்தச் சூழலில் தான் இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கமளித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை இதேபோல் தொடர்ந்து சரிந்து வந்தால்.. எரிபொருள் விலையைக் குறைப்பது குறித்து அரசும் எண்ணெய் நிறுவனங்களும் மறுபரிசீலனை செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு விளக்கம்
அவர் மேலும், "தற்போது விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலையானது சில மாதங்களுக்கு முன்பு அதிக விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யின் அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் மேற்கு ஆசிய மோதலின் உச்சக்கட்டத்தின் போது வாங்கிய கச்சா எண்ணெய்யையே சுத்திகரித்து வருகின்றன.
இதன் காரணமாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் அது சில்லறை விற்பனையில் பிரதிபலிக்கவில்லை. கடந்த ஜூன் 30ம் வரையிலான காலகட்டத்தில்.. பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களை அசல் விலையை விடவும் மிகக் குறைவான விலைக்கு விற்றதால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு சுமார் 74,781 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.
இந்தியாவில் விலையேற்றம்
மேற்கு ஆசிய மோதலின் போது உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு சுமார் 7.50 ரூபாய் மட்டுமே உயர்ந்தது. மக்கள் சுமையைக் குறைக்க.. மத்திய அரசு ஆரம்பத்தில் இறக்குமதி வரியைக் கணிசமாகக் குறைத்தது. அதன் பிறகு சிறிதளவு மட்டுமே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது. போர் காலகட்டத்தில் பல உலக நாடுகளில் பெட்ரோல்- டீசல் விலை உச்சத்திற்குப் போனது. ஆனால், இந்தியாவில் வெறும் 5% மட்டுமே அவை உயர்ந்தது.
வளைகுடா போர்
முன்னதாக மேற்கு ஆசிய மோதலின் உச்சத்தின் போது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால்.. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு கிட்டத்தட்ட 120 டாலராக உயர்ந்தது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தன. இப்போது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மீண்டும் 70 டாலராக குறைந்துள்ளது.














Click it and Unblock the Notifications