“மீண்டும் மீண்டும் ஒரே கோரிக்கைக்காக”.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்கக்கோரிய மனு தள்ளுபடி
மதுரை: மதுரை தோப்பூரில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டு, 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என அரசுத் தரப்பில் கூறப்பட்டது. பின்னர் 2021-ல், 36 மாதங்களில் முடிக்கப்பட்டு 2026 ஜனவரி மாதம் ஒப்படைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை.

எனவே, மதுரை தோப்பூரில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், இந்த விவகாரத்தில் தவறான உறுதியை அளிக்கும் அரசு அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட வேண்டும்." என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், "மனுதாரர் ஒரே கோரிக்கைக்காக மீண்டும், மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை முடித்து, நிர்வாகப் பணிகள் மற்றும் பிற பணிகளுக்கான அனைத்து தேவைகளையும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என்பது ஒரு நீண்ட கால நடைமுறை என்பதை மனுதாரர் புரிந்து கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்தனர்.
மேலும், ஏற்கனவே மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் ரூ.5000 ஆக குறைத்துள்ளது எனத் தெரிவித்து மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications