'அரண்மனை நாயே.. அடக்குடா வாயை'.. நிர்மல்குமாரை நேரடியாக எச்சரித்த திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன்
சென்னை: ஆட்சி நிர்வாகத்தை செய்து, மக்களிடத்திலே திட்டங்களை கொடுத்து உங்களுடைய பெயரை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு, திராவிட முன்னேற்றக்கழகத்தின் மீது நீங்கள் குற்றம் சுமந்துவீர்கள் ஆனால், இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புவீர்கள் ஆனால், எங்களுக்கு எங்களுடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய திரைக்கதை வசனம் தான் நியாபகத்திற்கு வருகிறது. 'அரண்மனை நாயே.. அடக்குடா வாயை' என்ற வசனம் தான் எங்களுக்கு நினைவுக்கு வருகிறது" என்று திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன், அமைச்சர் நிர்மல் குமாரை கடுமையாக எச்சரித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக குறித்து தவெக வைத்த குதிரை பேரம் குறித்து விளக்கம் அளித்தார். அத்துடன் வைகோவின் பேச்சை சுட்டிக்காட்டி, விஜய் தான் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் பரந்தாமன் குற்றம்சாட்டினார். அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினை அரசியலை விட்டு ஒதுங்கி கொள்ளுமாறு கடுமையாக பேசிய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமாரையும் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் கடுமையாக விமர்சித்தார்.
இது தொடர்பாக பரந்தாமன் கூறுகையில், "எங்களுடைய தலைவர் ஸ்டாலின் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்று நேற்று நிர்மல்குமார் வாய் கிழிய பேசுகிறாரே, அவர் ஒவ்வொரு கட்சியாக ஒதுங்கி வந்தவர் தான் (பாஜக, அதிமுக அடுத்து தவெக). ஒரே கட்சியில் இருக்கும் தகுதிப்படைத்தவர் என்பது அரசியல் புரிதல் அல்ல.. பாஜகவில் இருந்து அதிமுகவில் இருந்து, அமமுகவில் இருந்து கடைசியாக தஞ்சம் புகுந்து தவெகவிற்கு வந்தவர் எல்லாம், எங்களுடைய தலைவரை பார்த்து அரசியலில் இருந்து ஒதுங்குங்கள் என்று கூறுவதற்கு துளியும் அருகதை இல்லை.. தகுதியும் இல்லை..
ஆட்சி உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.. ஆட்சி நிர்வாகத்தை செய்து, மக்களிடத்திலே திட்டங்களை கொடுத்து உங்களுடைய பெயரை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு, திராவிட முன்னேற்றக்கழகத்தின் மீது நீங்கள் குற்றம் சுமந்துவீர்கள் ஆனால், இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புவீர்கள் ஆனால், எங்களுக்கு எங்களுடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய திரைக்கதை வசனம் தான் நியாபகத்திற்கு வருகிறது. 'அரண்மனை நாயே.. அடக்குடா வாயை' என்ற வசனம் தான் எங்களுக்கு நினைவுக்கு வருகிறது" இவ்வாறு திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
நிர்மல்குமார் பேசியது என்ன
சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "தவெக எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு ரூ.50 கோடி வரை பேரம் பேசுகிறார்கள். தவெக ஆட்சியை கவிழ்க்க கடந்த 40 நாட்களாக முயற்சிகள் நடந்து வருகிறது. திமுகவுடன் எடப்பாடி பழனிசாமியும் கூட்டு சேர்ந்து குறுக்கு வழியில் ஆட்சி செய்ய முயற்சி செய்து வருகிறார். மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜி போன்ற ஆட்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் எம்எல்ஏக்களைத் தொடர்புகொண்டு பல கோடிகளைத் தருவதாகப் பேசுகிறார்கள்.
இன்று ஒரு எம்எல்ஏவின் (ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ) புகாரின் அடிப்படையில் தான் காவல்துறை கைது செய்திருக்கிறது. இதனால்தான் மு.க ஸ்டாலின் 30 நாட்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொல்கிறார். மு.க ஸ்டாலின் தயவு செய்து அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த கெடுதலுக்காக மன்னிப்பு கேட்டு ஒதுங்கிவிடுங்கள். முதல்வராக இருந்தவர் இதற்கு முன் தோற்றிருக்கிறாரா? இது மக்கள் உங்களுக்கு கொடுத்த பாடம். இதற்கு மேலாவது திருந்துங்கள்" இவ்வாறு நிர்மல்குமார் கடுமையாக பேசியிருந்தார். இதற்கு தான் மிக கடுமையாக மொழியில் திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் பதிலடி கொடுத்துள்ளார்.














Click it and Unblock the Notifications