பொங்கலுக்கு புதிய ரகத்தில் இலவச வேட்டி, சேலை.. முன்பணமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை!
சென்னை: 2027 பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய நிர்வாக அனுமதி வழங்கி, முன்பணமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கடைகளின் மூலமாக பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தவெக ஆட்சியிலும் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது.

விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம், விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான நூல்களை கொள்முதல் செய்யும் பொருட்கள் இயக்குநிலை குழுவினை தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்த புள்ளிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000படி அமைத்து ஆணைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் 2027 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தும் நோக்கில் இலவச வேட்டி சேலைகளை உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அனுமதி அளித்துள்ளதுடன் முன்பணமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. பயனாளர்களுக்கு வழங்க 2.27 கோடி வேட்டிகள், 2.27 கோடி சேலைகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.
பொங்கலுக்கு வழங்குவதற்கான வேட்டி, சேலை தயாரிப்பு பணிகளை அரசு தொடங்கியுள்ளது. வேட்டி, சேலைகள் கொள்முதல், உற்பத்தி, தரக் கட்டுப்பாடு மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்பட உள்ளன. பின்னர், நியாய விலைக் கடைகள் மூலம் பயனாளிகளுக்கு அவை விநியோகிக்கப்படும்.
மேலும், இந்த வேட்டி, சேலை ஆடைகள் உடுத்துவதற்கு வசதியாக இருக்கும் வகையில் புதிய நூல் ரகங்களை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய ரகத்தில் தயார் செய்ய அரசுக்கு ரூ.642.88 கோடி செலவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications