இந்த மாதமே வெளியாகும் "ஜனநாயகன்”.. விஜய் ரசிகர்கள் ஹேப்பி.. ஆனால் மற்ற நடிகர்களுக்கு சிக்கல்!
சென்னை: தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடித்த கடைசி திரைப்படம் 'ஜனநாயகன்'. இந்த படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பல மாதங்களாக நீடித்து வருகிறது. ஒரு வழியாக அந்த காத்திருப்புக்கு முடிவு கட்டும் வகையில், படம் விரைவில் திரைக்கு வருவதற்கான சூழ்நிலை உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரம்பத்தில் பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டிருந்த 'ஜனநாயகன்', தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் திடீரென நிறுத்தப்பட்டது. படத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று தணிக்கை வாரியம் கூறியதால், தயாரிப்பு நிறுவனம் கோர்டில் வழக்கு தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் படத்திற்கு உடனடியாக சர்டிபிகேட் வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டாலும், பின்னர் மேல்முறையீட்டில் வழக்கு மீண்டும் தொடக்கம் முதல் விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவானது.

ஜனநாயகன் படம் சந்தித்த சர்ச்சை
அதன்பிறகு, தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கையே வாபஸ் பெற்றது. இதனால் தணிக்கை நடைமுறை புதிய பாதையில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தற்போது 'ஜனநாயகன்' வெளியீடு மீண்டும் சாத்தியமாகி இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வரும் ஜூலை 16ஆம் தேதி இந்த படம் வெளியாவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதோடு இன்னொரு பெரிய கேள்வியும் எழுந்திருக்கிறது. ஏற்கனவே ஜூலை 3-ம் தேதி 'கட்டா குஸ்தி 2', 'டார்க்', 'இருமுனை' உள்ளிட்ட படங்கள் வெளியாக தயாராக உள்ளன. அடுத்த வாரம், ஜூலை 10-ம் தேதி நடிகர் முரளியின் மகன் அதர்வா நடித்த 'இதயம் முரளி' திரைப்படமும் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

பிற நடிகர்களுக்கு சோகம்
அந்த படத்திற்கும் தற்போது புதிய சட்ட சிக்கல் உருவாகியுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா தொடர்ந்த வழக்கு காரணமாக, 'இதயம் முரளி' பிளான் பண்ணுன தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் இருக்கிறது. இதனால் ஜூலை மாதம் வெளியாக இருக்கும் பல படங்களின் ரிலீஸ் செட்யூல் மாறக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது.
இதே நேரத்தில் 'ஜனநாயகன்' குறித்து இன்னொரு விஷயமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் காட்சி இணையத்தில் கசிந்தது. நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தகவலின்படி, அந்த லீக்கான பதிப்பை சுமார் 1.2 கோடி பேர் பார்த்திருப்பதாக கூறப்பட்டது. அந்த தகவலே அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் கருத்து
இதனால் தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் இரண்டு விதமான கருத்துகள் பேசுகின்றனர். ஒரு தரப்பு, "விஜய்யின் கடைசி படம் என்பதால் தியேட்டரில் கண்டிப்பாக பெரிய அளவில் கொண்டாடப்படும்" என்று நம்புகிறது. மற்றொரு தரப்பு, "ஏற்கனவே படம் கசிந்த நிலையில், அதே அளவிலான வசூல் கிடைக்குமா?" என்ற கேள்வியை எழுப்புகிறது.
எதுவாக இருந்தாலும், 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், ஜூலை மாதத்தில் வெளியாக காத்திருக்கும் மற்ற படங்களின் வசூலிலும், திரையரங்கு ஒதுக்கீட்டிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரே மாதத்தில் பல பெரிய படங்கள் சட்ட சிக்கல்களையும், வெளியீட்டு குழப்பங்களையும் சந்தித்து வருவதால், இந்த ஜூலை தமிழ் சினிமாவுக்கு மிகவும் பரபரப்பான மாதமாக மாறியுள்ளது.
'ஜனநாயகன்' உண்மையிலேயே திரைக்கு வருகிறதா, வந்தால் ரசிகர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதே தற்போது திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.














Click it and Unblock the Notifications