மதுரை ரயில்வே ஸ்டேஷனில் "காதல் கோட்டை" யை மிஞ்சிய காட்சி.. கமலி, சூர்யான்னு கத்திட்டு.. யாரிந்த ஜோடி
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கப்பட்ட காதல் கோட்டை பட ரீல்ஸ் காட்சிதான், இணையத்தில் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது.. ரயில்வே பாதுகாப்பு விஷயத்தில் எப்போதுமே போலீசார் விழிப்பாக இருந்து வருகிறார்கள்.. அப்படியிருந்தும் இப்படியொரு சீன் எப்படி எடுக்கப்பட்டது தெரியவில்லை.. யாரிந்த ஜோடி என்றும் தெரியவில்லை.. ஆனால், ரீல்ஸ் வீடியோவை பார்த்ததுமே மொத்த ரயில்வே அதிகாரிகளும் கொந்தளித்து விட்டார்கள்.
அஜித் குமார், தேவயானி நடிப்பில் வெளியான 'காதல் கோட்டை' படத்தின் கிளைமாக்ஸ் சீனை அவ்வளவு லேசில் யாரும் மறந்துவிட முடியாது. ரயில்வே ஸ்டேஷன் "கண்ணும் கண்ணும் மோதுமம்மா" என்ற பாடலோடு ஹீரோயினும், ஹீரோவும் ஓடிவந்து சந்தித்து கொள்ளும் அந்த உணர்வுபூர்வமான காட்சியை, அப்படியே ஒரு ஜோடி நிஜத்தில் நடித்து காட்டி ரீல்ஸ் எடுத்துள்ளது.

மதுரை ரயில்வே ஸ்டேஷன்
மதுரையைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடி நிஜ ரயில்வே ஸ்டேஷனிலேயே ரீல்ஸாக எடுத்து சோஷியல் மீடியாவிலும் அதை ஷேர் செய்து விட்டார்கள்.
மதுரை ரயில்வே ஸ்டேஷனை பொறுத்தவரை, தினமும் பல்வேறு மாநிலங்களில் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.. இதனால் 24 மணி நேரமும் பிஸியாகவே இயங்கும் இந்த ரயில் நிலையத்தில், ரயில்கள் எப்போதும் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கமாகும்..
கமலி - சூர்யா கத்திக்கொண்டு ஓடிய ஜோடி
இத்தகைய பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள்தான், அந்த காதல் ஜோடி நுழைந்து, 'காதல் கோட்டை' படத்தின் கிளைமாக்ஸ் சீனை அச்சு அசலாக ரீல்ஸாக மாற்றியுள்ளனர். வீடியோவில் அந்தப் பெண் "சூர்யா என்றும், அந்த இளைஞர் "கமலி" என்றும் மாற்றி மாற்றி கத்திக் கொண்டு பிளாட்பாரத்தில் ஓடுகிறார்கள்.
இதில் உச்சக்கட்ட சீன் என்ன தெரியுமா? காதல் கோட்டை படத்தில் அஜித் தனது பனியனில் ரோஜாப்பூ வரைந்து வைத்திருப்பதைப் போல, இந்த இளைஞரும் ஓடும் ரயிலுக்கு முன்பாக தனது சட்டையைக் கழற்றி எறிகிறார்.. தன்னுடைய பனியனில் ரோஜாவிற்கு பதிலாக "வாகைப்பூவை" வரைந்து, அதனை அந்தப் பெண்ணிடம் காட்டி காதலை வெளிப்படுத்துகிறார்.
அதுமட்டுமல்லாமல் ரயிலுக்குள் ஏறுவது, சீட்டில் ஜன்னல் வழியே உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, பிறகு பிளாட்பாரத்தில் சினிமா பாணியில் ஓடி வருவது என ஒட்டுமொத்த மதுரை ரயில்வே ஸ்டேஷனையும் தங்களின் சொந்த ரீல்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி ரகளை செய்திருக்கிறது இந்த ஜோடி..
காதல் கோட்டை இடமா
சினிமா ரசிகர்களுக்கு இதெல்லாம் சுவாரசியமாகத் தெரிந்தாலும், பொது இடத்தில் எல்லை மீறிய இவர்களின் இந்த செயல் காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. "ஏன்பா... வியூஸ்காக இப்படியா பொது இடத்தில் பண்ணுவீங்க?" என நேரில் பார்த்த பயணிகள் நொந்து கொண்டார்களாம்.
இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது.. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், "இது என்ன மதுரை ரயில் நிலையமா? இல்லை காதல் கோட்டையை கட்டக்கூடிய இடமா?" என காட்டமான கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள்.
நிஜமாகவே ரீல்ஸ் வீடியோ? ஏஐ வீடியோ
பொதுவாக, ரயில் நிலையங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், அங்கு சினிமா அல்லது ஷாட் ஃபிலிம் எடுப்பதாக இருந்தால், ரயில்வே நிர்வாகத்திடம் பல வாரங்களுக்கு முன்பே உரிய கட்டணம் செலுத்தி, அனுமதி பெற்றுத்தான் நடத்த முடியும். ஆனால், ட்ரெண்டிங்கிற்காக ரீல்ஸ் எடுத்த இந்த ஜோடி யாரிடம் அனுமதி வாங்கினார்கள் தெரியவில்லை..
இந்த ரீல்ஸ் வீடியோ இப்போது மதுரை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசாரின் கவனத்திற்குச் சென்றுள்ளது. உண்மையிலேயே இது ரீல்ஸ் வீடியோவா? அல்லது ஏஐ வீடியோவா என்ற கோணத்தில் ஆய்வு செய்துள்ளனர். அப்போதுதான், அது நிஜமாகவே எடுக்கப்பட்ட 'ரீல்ஸ் வீடியோ என்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், இதுகுறித்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications