Ponmudi: சைவம், வைணவம்! பொன்முடியின் அவதூறு பேச்சு! வழக்கை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் குறித்தும் பெண்களை ஆபாசமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஹைகோர்ட் ஒத்தி வைத்தது.
சென்னையில் நடந்த விழா ஒன்றில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, சைவம் வைணவம் என மோசமான பொருள் தரும்படியான, அதுவும் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கெனவே மகளிர் விடியல் பயணத்தை ஓசி என பொன்முடி விமர்சித்திருந்த நிலையில் மீண்டும் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் வெறுப்பு பேச்சு பேசிய பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த புகார் மனு எம்பி- எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் இந்த புகாரை ரத்து செய்யக் கோரியும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் பொன்முடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் , இந்த நிகழ்ச்சி மூடிய அரங்கில் நடைபெற்றது. இந்த வழக்கை தாக்கல் செய்யும் முன் அரசின் அனுமதியை பெறவில்லை என்பதால் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது என வாதம் முன் வைக்கப்பட்டது.
இதையடுத்து புகார்தாரரான உமா ஆனந்தன், பொன்முடி பேசிய பேச்சுகள் ஊடகங்களில் வெளியாகும், அந்த வீடியோக்களை எல்லாரும் பார்ப்பார்கள் என தெரிந்தே பேசியுள்ளார். எனவே இந்த வழக்கை பொன்முடி எதிர்கொண்டு, எனது குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரம் இல்லை என்பதை நிரூபிக்கப்பட்டும் என வாதம் செய்யப்பட்டது.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய பொன்முடியின் வழக்கை ரத்து செய்ய முடியாது என கூறி, இந்த வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். பொன்முடியின் இந்த பேச்சால் அவரிடம் இருந்த பதவியை திமுக தலைமை பறித்தது, பின்பு சில மாதங்களில் பதவியை கொடுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications