குடிமகன்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பார்கள் மூடல்.. என்னாச்சு?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பிரியர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பார்களில் மதுவோடு கொஞ்சம் சைடிஷ் சாப்பிட்டு நிம்மதியாக அமர நினைத்த குடிமகன்கள், தற்போது மாற்று வழிகளைத் தேடி அலைந்து வருகின்றனர்.
பார்களின் ஒப்பந்தம் புதுப்பிக்காததால் தமிழ்நாடு முழுவதும் பார்கள் மூடப்பட்டுள்ளன. புதிய டெண்டர்கள் வெளியாகும் வரை டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

என்ன நடந்தது?
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2,638 டாஸ்மாக் பார்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் உரிமக் காலம் (ஒப்பந்தம்) முடிவடைந்ததை அடுத்து, புதிய ஒப்பந்தங்கள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. புதிய டெண்டர்கள் கோரப்பட்டு, அவை இறுதி செய்யப்படும் வரை இந்த டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.
சாலையோரங்களில் அவதிப்படும் குடிமகன்கள்
பார்கள் மூடப்பட்டதால், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கும் மதுப் பிரியர்கள் அமர்ந்து குடிக்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர். இதன் விளைவாக, பார்கள் இல்லாததால் வேறு வழியின்றி சாலையோரங்கள், மரத்தடிகள், பாலங்களின் கீழ் மற்றும் பொது இடங்களில் அமர்ந்து மது அருந்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மாலை நேரங்களில் பொதுமக்களும், பெண்களும் அந்த வழியே செல்ல அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. பார்கள் மூடப்பட்டாலும், அதன் அருகில் உள்ள தள்ளுவண்டி மற்றும் சைடிஷ் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதுகிறது.
அடுத்து என்ன?
புதிய டெண்டர் நடைமுறைகள் எப்போது தொடங்கும், எப்போது பார்கள் மீண்டும் திறக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக குஷியாகக் காத்திருக்கிறார்கள் குடிமகன்கள். அதுவரை இந்த 'சாலையோர பார்' தொடரும் என்றே தெரிகிறது. சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க, பொது இடங்களில் மது அருந்துபவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications