2 ரூபாய் மேட்டர் தான்.. ஆனாலும் சிங்கப்பூரில் மாட்டினால் பெரிய சிக்கல் வந்துடும்.. ரொம்பக் கவனம்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: தெற்காசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் உலகின் மிகவும் தூய்மையான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நகரின் தூய்மையை இதுபோல வைத்திருக்க அந்நாட்டு அரசு பல்வேறு கடுமையான விதிகளை வைத்திருக்கிறது. அதில் சில விதிகள் பலருக்கும் ஆச்சரியத்தைக் கூட ஏற்படுத்தலாம். அப்படி உலகை வியக்க வைக்கும் ஒரு விதி குறித்து நாம் பார்க்கலாம்!

சிங்கப்பூர் உலகின் மிகவும் சுத்தமான மற்றும் கடுமையான சட்ட திட்டங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அதிகளவில் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்கள். அங்குத் தெருக்களில் குப்பை கொட்டுவது முதல் பொது இடங்களில் விதிமுறைகளை மீறுவது வரை பல செயல்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.

Singapore Banned Chewing Gum

பூமர் தடை

அதேபோல், உலகம் முழுவதும் அதிகம் பேசப்படும் சிங்கப்பூரின் ஒரு விதி தான் பூமர், அதாவது சூயிங் கம் மீதான தடை இருக்கிறது. 1980 மற்றும் 1990களில் உலகின் பல நகரங்களில் மென்று முடித்த பூமர்களை நடைபாதைகள், பேருந்து நிறுத்தங்கள், லிஃப்ட் கதவுகள், பூங்கா இருக்கைகள் மற்றும் கட்டிடங்களின் சுவர்களில் ஒட்டிவிடுவது மிகவும் சாதாரணமான காட்சியாக இருந்தது. அந்த தலைமுறையினர் இதை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பார்த்துள்ளனர்.

இதனால் அந்த காலகட்டத்தில் வெளியே சென்று திரும்பும்போது செருப்பு அல்லது ஷூக்களில் நிச்சயம் பூமர்கள் ஒட்டி இருக்கும். அதை அகற்றுவதும் கூட பெரிய வேலை தான். சிங்கப்பூர் இந்த பழக்கத்தை மிகவும் மோசமானதாகக் கருதியது. பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவது, நகரின் தூய்மை பாதிக்கப்படுவது மற்றும் அவற்றை சுத்தம் செய்வதற்காக அரசுக்கு அதிக செலவு ஏற்படுவது போன்ற காரணங்களால் பூமர் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

காரணம்

அதன்படி 1992ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு சூயிங் கம் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு மொத்தமாகத் தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பிக்கப்பட்டது. மக்கள் மென்று முடித்த சூயிங் கம்களை சாலைகள், நடைபாதைகள், லிஃப்ட் கதவுகள், பேருந்து இருக்கைகள் உள்ளிட்ட பல பொது இடங்களில் ஒட்டிவிட்டுச் சென்றதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.

குறிப்பாக, அப்போது புதிதாகச் செயல்படத் தொடங்கிய MRT ரயில்களில் சிலர் சூயிங் கம்களை ரயில் கதவுகளின் சென்சார்களில் ஒட்டியதால் கதவுகள் சரியாக மூடப்படாமல் சேவை பாதிக்கப்பட்டன. இதனால் சிங்கப்பூர் ரயில் சேவை தாமதமானதோடு, பராமரிப்பு செலவும் கணிசமாக உயர்ந்தது. இதை எல்லாம் மனதில் வைத்தே சிங்கப்பூர் அரசு இந்த பூமர் விவகாரத்தில் கடுமையான முடிவை எடுத்தது.

விவாதம்

அப்போதே இந்த முடிவு சர்வதேச விவாதத்தை ஏற்படுத்தியது. சிலர் இதைத் தனிநபர் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை என விமர்சித்தனர். இருப்பினும், மற்றவர்கள் சிங்கப்பூரின் தூய்மை மற்றும் ஒழுங்கை பாதுகாக்க இது அவசியமான முடிவு என ஆதரித்தனர். அதேநேரம் இங்கு நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அனைத்து வகையான பூமர்களுக்கும் அங்கு தடை இல்லை.

2004ல் அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு, மருத்துவ ரீதியான பயன்பாடு மற்றும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில வகை சூயிங் கம்களுக்கும் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அதேநேரம் நம்ம ஊரை போல சாதாரண மளிகைக் கடைக்கு போய் எல்லாம் அங்கு பூமரை வாங்க முடியாது. அதற்குத் தனியாக மருத்துவர்கள் பரிந்துரை ஷீட் அவசியமாகிறது.

சுற்றுலா பயணிகள்

அதேநேரம் சுற்றுலாப் பயணிகள் அல்லது வெளிநாட்டினர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகக் குறைந்த அளவில் சூயிங் கம் வைத்திருப்பது குற்றமாகக் கருதப்படுவதில்லை. ஆனால் அதை விற்பனை செய்வது அல்லது பொது இடங்களில் அலட்சியமாக வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமாம். இன்றும் உலகின் மிகவும் சுத்தமான நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் திகழ்வதற்கு இதுபோன்ற கடுமையான சட்டங்களும், அவற்றை மக்கள் பெரும்பாலும் கடைப்பிடிப்பதும் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+