Karuppu: விஜய் அரசியலுக்கு வந்து விட்டதால் ! சினிமாவில் வெற்றிடமா? "கருப்பு" ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்
நெல்லை: நடிகர் விஜய் அரசியலுக்கு சென்ற பின்னர் திரையுலகில் வெற்றிடம் உருவானதாக கருதவில்லை. அவரைப் போல் பெரிய நட்சத்திரங்கள் பலர் திரையுலையில் உள்ளனர். ஆன்மீக ரீதியான படங்களை மோசமாக விமர்சனம் செய்பவர்கள் ரசிகர்களிடமிருந்து தள்ளி இருப்பதாகவே கருதுகிறேன் என நெல்லையில் நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.
நெல்லை சந்திப்பு ராம் சினிமாஸ் திரையரங்கில் கருப்பு திரைப்படத்தை ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தின் இயக்குநரும் நடிகருமான ஆர் ஜே பாலாஜி பார்த்து ரசித்தார். அவருக்கு திரையரங்கு நிர்வாகம் மற்றும் நடிகர் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் மேளதாளம் முழங்க, பட்டாசுகள் வெடித்து பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ரசிகர்களுடன் இணைந்து ஆர்.ஜே. பாலாஜி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “கருப்பு திரைப்படத்தை மக்கள் திருவிழா போல் பார்த்து கொண்டாடுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஊரில் இருந்து சினிமா ஆசையோடு வந்து கஷ்டப்பட்டவர்களுக்கு கிடைத்த வெற்றி இது. எனக்கு கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. இந்த திரைப்படத்தை மக்களிடம் கடவுள் கொண்டு சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. என்மீதும், கடவுள் மீதும் நம்பிக்கை வைத்து இந்த திரைப்படத்தை வெளியிட்டோம்.
தற்போது இந்த தருணம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கருப்பு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும். ஆனால் அதற்கான கதை எழுதும் பணி இன்னும் தொடங்கவில்லை.
திரையுலகில் வெற்றிடம் என்பதே கிடையாது. நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றதால் வெற்றிடம் உருவாகும் என்பதெல்லாம் இல்லை. விஜய் தமிழக முதலமைச்சராக ஆகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நடிகர் சூர்யா போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்கள் இன்னும் திரையுலகில் இருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் பொள்ளாச்சி மாசாணி அம்மன் கருவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. அந்த கோவிலுக்கு சென்று நீதிக்காக வேண்டி மிளகாய் அரைத்து பிரார்த்தனை செய்தால் அம்மன் தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை. அதேபோல் உயர் நீதிமன்ற மகாராஜா கோவிலையும் சொல்கிறார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் சுவாமி கும்பிட்டு கொண்டிருந்தபோது சூர்யாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதை கடவுளின் அழைப்பு என நினைத்து இந்த திரைப்படத்தை ஒப்புக் கொண்டு கதை சொல்லி படத்தை எடுத்தோம்.
கடவுள் மறுப்பு, கடவுள் பக்தி திரைப்படங்கள் என்பது சாம்பாரில் இருக்கும் காய்கறிகள் போன்றது. கடவுள் நம்பிக்கை உள்ள பலர் இந்த படத்தை கொண்டாடுகிறார்கள். எனக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளது. அதனால் இதுபோன்ற படங்களை எடுக்கிறேன்.
அடுத்த படம் எப்போது எடுக்கப் போகிறோம் என்ற யோசனை தற்போது இல்லை. இந்த நிமிடம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனை அனுபவித்து வருகிறேன். என் மீது எந்த வகையான முத்திரை குத்தினாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
'ஆர்.ஜே. பாலாஜி பாஜகவாதி’, 'ஆர்.ஜே. பாலாஜி திமுகவாதி’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பொதுமக்களுக்கு அனைத்தும் தெரியும். படம் திரையிடுவதில் ஏற்பட்ட சிக்கலால் மன உளைச்சலுக்கு ஆளாகி கண்ணீர் விட்டு அழுது காணொளி வெளியிட்டிருந்தேன்.
அதை ஏற்றுக் கொண்ட மக்கள் இந்த வெற்றியை தந்துள்ளனர். கடவுள் திரைப்படங்களை விமர்சனம் செய்பவர்கள், கடவுள் மறுப்பு திரைப்படங்களை விமர்சனம் செய்பவர்கள் மக்களிடமிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறார்கள் என்பதை இந்த வெற்றி காட்டுகிறது.
தணிக்கை குழு கருப்பு திரைப்படத்திற்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. திரைப்படத்தின் கருவை புரிந்து கொண்டு சான்றிதழ் வழங்கியுள்ளனர். மக்கள் திரைப்படத்தை பார்த்து மகிழ்ச்சியில் திரையரங்கிற்குள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்கிறார்கள்.
ஒருவரை கட்டுப்படுத்த முடியும்; ஆனால் ஆயிரக்கணக்கான மக்களின் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாது. மக்கள் செய்த அந்த செயல் இந்த படம் அனைவரிடமும் சென்று சேர்ந்துள்ளது என்பதையே காட்டுகிறது” என்றார்.












Click it and Unblock the Notifications