அமைச்சர் கில்லி சரத்குமாரை நீக்கிட வேண்டும்.. விளக்கத்தை ஏற்க முடியாது.. துரைமுருகன் ஆவேசம்
சென்னை: அமைச்சர் கில்லி சரத்குமார் போதை பொருள் சாப்பிட்டார் என நாளிதழில்களில் செய்திகள் வந்து இருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் அமைச்சர் சொல்லும் விளக்கம் ஏற்றுக் கொள்ள முடியாது. அவரை நீக்க வேண்டும் என திமுக மாணவர் அணி போரட்டம் நடத்துகிறது. ஆனால் திமுகவினரை கைது செய்கிறார்கள். கைதாவது திமுகவுக்கு புதியது அல்ல என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.பி.எல் போட்டியின்போது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பவுடர் வடிவில் தனது செல்போனில் வைத்து எதையோ நொறுக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், அது போதை பொருள்தான் என குற்றச்சாட்டு எழுந்து, எதிர்க்கட்சியினர் அமைச்சர் சரத்குமாரின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் அவரை கண்டித்தும், அவர் பதபி விலக வேண்டும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திமுக மாணவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சென்னையில் திமுக மாணவரணி சார்பில் இன்று காலை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் எதிரே நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்தனர்.
சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக சார்பில் காலையிலேயே ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. மேடை அமைப்பது, speaker வைப்பது என போராட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் அப்போது அங்கு வந்த காவல்துறையினர் திமுகவினரிடம் "போராட்டம் நடத்த அனுமதி இல்லை" என்றும் ஏற்பாடுகளை நிறுத்தவும் கூறினார். தொடர்ச்சியாக இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் அனுமதியின்றி போராட முயன்றதாக கூறி 20 க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
கைது நடவடிக்கை குறித்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒரு அமைச்சர் போதை பொருள் சாப்பிட்டார் என நாளிதழில்களில் செய்திகள் வந்து இருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் அமைச்சர் சொல்லும் விளக்கம் ஏற்றுக் கொள்ள முடியாது. அவரை நீக்க வேண்டும் என திமுக மாணவர் அணி போரட்டம் நடத்துகிறது. ஆனால் திமுகவினரை கைது செய்கிறார்கள். கைதாவது திமுகவுக்கு புதியது அல்ல" என்று பதிலளித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டமும் நடந்தது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் கைது செய் போதை ஆசாமியை கைது செய். மறைக்காதே மறைக்காதே. குற்றத்தை மறைக்காதே. நடிக்காதே நடிக்காதே மாத்திரை என்று நடிக்காதே என கோஷங்களை மா சுப்பிரமணியன் எழுப்பினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் செல்போனுக்கு பின்னால் ஒரு பவுடரை நசுக்குவதை போன்று ஒரு காட்சி அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் தன்னிடம் இருக்கும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வைச்சு நசுக்கிறார். கையில் ஐநூறு ரூபாய் நோட்டும் வைத்திருந்தார். பொதுவாக உயர் ரக போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் இதுபோன்று செய்வார்கள் என கூறப்படுகிறது. இதனை தான் அந்த அமைச்சர் செய்து இருக்கிறார். இதற்கு அவர் என்னுடைய பிறந்த சில நாட்களே ஆன குழந்தைக்கு மருந்து அளிப்பதற்கே இது மாதிரி செய்தேன் என்கிறார். எந்தவொரு ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கும் மருத்துவர் மாத்திரை கொடுப்பதில்லை.
அமைச்சர் சொன்ன பொய்யை அவர் மனைவியும் மறுத்து இருக்கிறார். எனவே பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது அவரின் சமூக வலைத்தள பதிவில் இருந்தே தெரிய வந்துள்ளது. இதனை மறைப்பதற்கு ஏராளமான பொய்களை சொல்லி கொண்டிருக்கிறார். போதைக்கு எதிரான பிரச்சாரம் கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சி காலத்தில் மிகப்பெரிய அளவில் நடந்தது. பிற மாநிலங்களில் இருந்து கஞ்சா கொண்டு வருவதை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நாங்களும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பிரச்சாரம் நடத்துகிறோம் என்று மாரத்தான் போட்டி வைத்தது. அதனை தொடர்ந்து அமைச்சரின் இந்த வீடியோ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டியது முதலமைச்சரின் ஜனநாயக கடமை. ஆனால் இதுவரை பதில் சொல்லவில்லை. அதோடு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" இவ்வாறு மா சுப்பிரமணியன் கூறினார்.














Click it and Unblock the Notifications