அண்ணாமலை பின்னணியில் ஆர்எஸ்எஸ், பாஜக! திருப்பூர் நிகழ்ச்சிதான் ஆதாரம்.. எழுந்த கடுமையான விமர்சனம்
சென்னை: வி த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை திருப்பூரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அண்ணாமலை சான்றிதழ் வழங்கினார். அப்போது அண்ணாமலையின் காலில் விழுந்து சில மாணவர்கள் ஆசிர்வாதம் பெற்றது சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது.
இரு ஒருபக்கம் இருக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பள்ளிக்கு அண்ணாமலை சென்றது, அவர் பாஜக - ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மறைமுக ஆதரவில் இயங்குவதையே காட்டுகிறது என்று பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

பாஜகவின் பீ டீம்
பாஜகவில் இருந்து வெளியே வந்த அண்ணாமலை, தனது புதிய அமைப்பு மதசார்பற்றதாக இருக்கும் என்று கூறி வருகிறார். எனினும் பாஜகவின் பி டீம் ஆகவே அண்ணாமலை களமிறக்கப்பட்டு இருப்பதாகவும் பாஜக தலைமை மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆசிர்வாதத்தினுடன் தான், தனது அரசியல் பாதையை தனியாக அண்ணாமலை தொடர்வதாகவும் அரசியல் களத்திலும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
இந்த விமர்சனங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக திருப்பூர் பள்ளி நிகழ்ச்சி அமைந்து இருந்தது. அண்ணாமலை உண்மையாகவே பாஜகவுடனான தனது உறவை துண்டித்துக்கொண்டாரா? அல்லது பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ் ஆசிர்வாதத்துடன் தான் தனதுஅரசியலை தொடர இருக்கிறாரா? என்று பலரும் கேள்விக்கணைகளை தொடுத்து இருந்தனர். இது பற்றி அண்ணாமலை தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
அண்ணாமலை அமைப்புக்கு நாங்க ஆதரவா?
ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகி ஒருவர், அண்ணாமலைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். இது குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தரப்பில் கூறியதாவது:- ஆர்.எஸ்.எஸ்-க்கோ அல்லது பாஜகவுக்கோ அண்ணாமலையுடன் எந்த தொடர்பும் தற்போது இல்லை. பாஜகவில் இருந்து விலகுவது என்பது அண்ணாமலை எடுத்த தனிப்பட்ட முடிவாகும். ஜூன் 05 ஆம் தேதிக்கு பிறகு அண்ணாமலை எடுத்த முடிவுகளுக்கும் பாஜகவிற்கும் தொடர்பு எதுவும் இல்லை.
அரசியலில் அவரது புதிய பாதை என்பது முழுக்க முழுக்க அவரே எடுத்த முடிவு. ஆர்.எஸ்.எஸ்-க்கும் இதற்கும் துளியளவும் தொடர்பு இல்லை. மறைமுகமாக யாரையும் ஆதரிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அண்ணாமலையின் அமைப்புக்கு நாங்கள் எந்த வித ஆதரவையும் அளிக்கவில்லை. எங்களை பொறுத்தவரை ஸ்டாலின், விஜய், சீமான் போல அண்ணாமலையும் மற்றொரு அரசியல் தலைவர் அவ்வளவுதான்" என்றார்.
அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று இருந்த பாஜக 1 இடம் மட்டுமே வென்றது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருந்த அண்ணாமலை தேர்தல் முடிவு வந்ததும், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். விலகுவதற்கு முன்பாக அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.
அதன்பிறகே வி தி லீடர்ஸ் என்ற அமைப்பை தொடங்கிய அண்ணாமலை அடுத்து வரும் பொதுத்தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று பேசியுள்ளார். கட்சி தொடங்குவதற்கு முன்பாக பாஜக தலைவர்களை சந்தித்து வந்த நிலையில், பாஜகவின் ஏற்பாட்டின் பேரிலேயே அண்ணாமலை தனித்து களம் காண்பதாக தமிழக கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.















Click it and Unblock the Notifications