விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்காதது ஏன்? கலா மாஸ்டர் விளக்கம்
டெல்லி: தேசிய திரைப்பட விருது விஜய் சேதுபதிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஏன் கிடைக்கவில்லை என்ற காரணம் குறித்து ஜூரியாக (நடுவர் குழு) செயல்பட்ட கலா மாஸ்டர் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ஆம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்பட இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் 72 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட படங்கள் விருதுக்கான தேர்வில் பங்கேற்றன.
அதில் அமரன் திரைப்படத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி. பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் மகாராஜா திரைப்படத்தில் நடித்த நடிகை சச்சனாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது பிரம்மயுகம் படத்திற்காக மம்முட்டி தேர்வாகியுள்ளார்.
சிறந்த இயக்குநருக்கான விருது அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் கேப்டன் மில்லர் பட இயக்குநர் அருண் மாதேஸ்வர், சிறந்த பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி உள்ளிட்டோருக்கு கிடைத்திருந்தது.
இந்த நிலையில் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியும், அமரன் படத்தில் சிவகார்த்திகேயனும் சிறப்பாக நடித்திருந்த போதிலும் அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து தேசிய விருதுக்கான ஜூரி குழுவில் இருந்த கலா மாஸ்டர் கூறியிருப்பதாவது: தேசிய விருதுக்காக தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் எல்லா மொழிகளிலும் 400 படங்கள் பரிந்துரைக்கு வந்தன. அவற்றை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்த போது யாருக்கு கொடுப்பது என எங்களுக்கு தெரியவில்லை.
மகாராஜா திரைப்படத்தில் சச்சனாவுக்கு விருது கிடைத்திருக்கிறது. இந்த தேர்வு என்பது மிகவும் கடுமையாக இருந்தது. மற்றபடி அவங்களுக்கு கொடுக்கக் கூடாது, இவங்களுக்கு கொடுக்கணும் என்பதெல்லாம் கிடையாது.
அது போல் ராயன் படம் ரொம்ப நல்ல படம். அதை தனுஷ் அழகாக இயக்கியிருந்தார். அஸ்ஸாமி மொழி படத்தில் ஒரு பெண் பார்வையற்றவராக நடித்திருந்தார். அவ்வளவு அழகாக நடித்திருந்தார். அந்த படத்தை பார்த்த குழுவினர் அழுதுவிட்டோம்.
இந்த போட்டிகளால் ஜூரிக்கு வாக்களிக்கும் முறையில் விருதாளர்களை தேர்வு செய்தோம். அதாவது விருதுக்குரிய சிறந்த நபரையோ அல்லது திரைப்படத்தையோ தேர்வு செய்ய அமைக்கப்பட்ட நடுவர் குழுவிற்குள் வாக்குப் பதிவு நடத்தி படங்களை தேர்வு செய்தோம்.
அப்படித்தான் தனுஷின் ராயன் படத்திற்கு சிறந்த தமிழ்ப் படம் என்ற விருதிற்கு தேர்வு செய்தோம். எனவே விருதுக்கு தேர்வு செய்வது என்பது சாதாரணமான விஷயம் இல்லை என கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
72ஆவது தேசிய திரைப்பட விருதுகளை தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த கலா மாஸ்டர், இ.வி.கணேஷ் பாபு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். கலா மாஸ்டர் முழு நீளத் திரைப்படங்கள் பிரிவிலும் கணேஷ் பாபு குறும்படங்கள், ஆவணங்கள் பிரிவிலும் நடுவர்களாக இருந்தனர்.












Click it and Unblock the Notifications