இதான் உங்க மதச்சார்பின்மையா? விஜய் டேபிளில் சிலுவை! வீடியோவால் வந்த வினை! சோஷியல் மீடியா கொதிக்குது!
சென்னை: சமீபத்தில் முதல்வர் விஜய் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த விழிப்புணர்வு வீடியோவில் முதல்வரின் மேஜையில் வைக்கப்பட்டிருந்த சிலுவை தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். மதச்சார்பற்ற அரசின் முதல்வர் எனக் கூறிக்கொள்பவர் மத அடையாளத்தை தனது டேபிளில் வைக்கலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர் சிலர். அதே நேரத்தில் இதற்கு முன்னால் இருந்த முதல்வர்கள் மத அடையாளங்களை பயன்படுத்திய புகைப்படங்களை பகிர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் விவரங்களை பதியலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை அடுத்து இந்த இணையதளம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் விஜய் தனது விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்தார்.

இது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டு இருந்த அவர்," இது வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல. நீங்கள் வழங்கும் தகவல் தான் எதிர்கால அரசு திட்டங்களுக்கான அடிப்படை. நான் பதிவு செய்துவிட்டேன். நீங்களும் பதிவு செய்யுங்கள் என அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
ஆனால் இப்போது இந்த விவகாரம் வேறு மாதிரியாக திரும்பி இருக்கிறது. விஜய் வெளியிட்டு இருந்த விழிப்புணர்வு வீடியோவை பார்த்த சில நெட்டிஷன்கள் முதல்வரின் மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய சிலுவையை சுட்டிக்காட்டி பரபரப்பை கிளப்பி இருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. மதச்சார்பற்ற முதல்வர் எனக் கூறிக்கொள்ளும் விஜய் சிலுவையை தனது டேபிளில் வைக்கலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் அரசு அலுவலகங்கள் அரசு பொறுப்பில் இருப்பவர்கள் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் பொருட்களை வைக்கக்கூடாது என்று விதி இருக்கும் நிலையில், அரசு அலுவலகங்கள் மதச்சார்பை தன்மையை பிரதிபலிக்க வேண்டும். இது போன்ற மதச் சின்னங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என கூறினர். அதே நேரத்தில் விஜய்க்கு பலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒருவர் தனிப்பட்ட முறையில் பின்பற்றும் மத நம்பிக்கையின் அடையாளமாக தனது மேஜையில் சிலுவை உள்ளிட்டவற்றை வைப்பதில் தவறில்லை. அது யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாத வரை அதனை சர்ச்சையாக வேண்டாம் என கூறுகின்றனர். முதல்வர் விஜய் தனது மேஜையில் சிறிய அளவில் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை வைத்திருப்பதில் எந்தத் தவறும் இல்லை. முதல்வர் அலுவலகத்தின் சுவரில் பெரிய அளவில் வைக்கப்பட்ட மதச் சின்னம் அல்ல.
பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இல்லை. மிகச் சிறிய அளவில் மேஜையில் வைக்கப்பட்டுள்ளது. அது தனது பணியை சிறப்பாக செய்ய உதவும் என்ற தனிப்பட்ட நம்பிக்கை அவருக்கு இருந்தால், அதை வைத்திருப்பதில் தவறு எதுவும் இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதற்கிடையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் அலுவலகத்தில் இந்து தெய்வங்களின் படங்களை வைத்திருந்த பழைய புகைப்படங்களையும் சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
"அப்போது அது விவாதமாகவில்லை. இப்போது மட்டும் ஏன்?" என்று கேள்வியை எழுப்புகின்றனர். அதேநேரத்தில், மதச்சார்பின்மை என்பது தனிப்பட்ட மத நம்பிக்கையை மறுப்பது அல்ல என்றும், அரசு அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மதத்தை முன்னிறுத்தக் கூடாது என்பதே அதன் அடிப்படை நோக்கம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.














Click it and Unblock the Notifications