’ஜன நாயகன்’ திருவிழா.. படம் ரிலீசன்று அரசு பொது விடுமுறை? புஸ்ஸி ஆனந்த அறிவிப்பார்.. வேற லெவல் அடி!
மதுரை: ஜனநாயகன் திரைப்படத்தை திருவிழா போட கொண்டாட வேண்டும் என அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ள நிலையில், அடுத்த அதிரடி அறிவிப்பாக ஜனநாயகன் படம் வெளியிடுகிற நாளில் அரசு விடுமுறையை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் பேசியுள்ள அவர்," தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி வராது என நினைத்து, அறம், பொருள், இன்பம் என 326 சாத்தியமே இல்லாத, செயல்படுத்த முடியாத திட்டங்களை எல்லாம் நிதி ஆதாரங்களை கணக்கிலே கொள்ளாமல் கானல் நீரைப் போன்ற திட்டங்களை தேர்தல் அறிக்கையிலே விஜய் அறிவித்தார்.
அதை நம்பி மக்களும் வாக்களித்தார்கள். இப்போது யாருமே ஏன் விஜய்யே எதிர்பார்க்காமல் த.வெகஆட்சி அமைத்து 75 நாட்களை நாம் கடந்து சென்றுவிட்டாலும், ஆட்சி அமைத்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளியே வரவில்லையோ முதல்வர் என்பது உண்மை.

ஆர்.பி. உதயகுமார்
முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியிலே சொன்ன உத்தரவாதத்தின் அடிப்படையிலே, முதல் முதலாக விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு, விஜயின் அறிவிப்பு ஒரு பேர் இடியாக கொடுத்திருக்கிறது. ஏமாற்றத்தை அளித்த காரணத்தினாலே, நாடு முழுவதும் இன்றைக்கு விவசாயிகள் தொடர் போராட்டத்திலே ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் அறிக்கையிலே வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது ஆட்சி அமைந்தவுடன் 500 யூனிட் வரை உபயோகிக்கும் மின் பயனாளர்களுக்கு மட்டுமே 200 யூனிட் மின்சார கட்டணம் இலவசம் என்று அறிவிப்பு நடைமுறையிலே வெறும் கண் துடைப்பாகத்தான் இருக்கிறது.
முதல்வர் விஜய்
அதுமட்டுமல்ல, தற்போது தமிழகத்திலே மின்சாரம் எங்கே இருக்கிறது என்று தேடுகிற வகையிலே, மின்சாரத்தை காணோம் என்று இருளிலே மூழ்கி இருக்கிறது. நாடு முழுவதும். இரவிலே பொதுமக்கள் போராட்டம் நடத்தாத நாளே இல்லை என்ற நிலைதான் தற்போது இருக்கிறது.இதுதான் முதல்வர் விஜய் அறிவிப்புக்கு கிடைத்திருக்கிற அங்கீகாரமாக இருக்கிறது. இப்போது அரசு மருத்துவமனையிலே பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை த.வெ.க அரசு அறிவித்திருக்கிறது.
தாய்மாமன் மோதிரம்
இந்த திட்டத்திலே அரசு மருத்துவமனைகளிலே பிறக்கும் 4,41,667 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கினாலே, இதற்கான தங்கத்தின் மதிப்பு மட்டும் ரூபாய் 580.79 கோடி. இதனோடு செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி, ஆகியவற்றை சேர்த்தால் மொத்த செலவு இதற்காக 750 கோடி ஒதுக்கீடு செய்வதாக சொல்லப்பட்டிருக்கிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த தாய்மாமன் திட்டம்எவ்வளவு பங்களிக்க முடியும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
விடுதியில் ஆய்வு
இப்படி இருக்கின்ற நேற்றைய தினம் மாணவர் விடுதியிலே முதல்வர் விஜய் நேரடி ஆய்வு செய்தார். மாணவர் விடுதியிலே முறையாக மாணவர்களுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்ட உணவுகளை மீண்டும் கொடுப்பதற்கு தமிழ்நாட்டின் முதல்வர் நேரடியாக சென்று ஆய்வு செய்யும் அளவிற்கு தான் த.வெ.க அரசின் நிர்வாகம் சென்று கொண்டிருக்கிறது.
ஜன நாயகன் படம்
அதில் தமிழகத்திலே மட்டுமல்ல, உலகெங்கும் வெளியிடப்படுகிற ஜனநாயகன் பட வெளியீட்டை திருவிழா போல் கொண்டாட வேண்டும் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் எல்லோரும் இதிலே பங்கு பெற்று வேண்டும் என அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். பொங்கலைப் போல, தீபாவளியைப் போல, ஜனநாயகன் பட வெளியீட்டு விழாவை . திருவிழா போல் கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பு கொடுத்திருக்கிற அமைச்சர் புஸ்சி ஆனந்த், அடுத்த அதிரடி அறிவிப்பாக ஜனநாயக படம் வெளியிடுகிற நாளில் அரசு விடுமுறையை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை" என்றார்.















Click it and Unblock the Notifications