அமைச்சர்களுடன் கைலாசா தூதர்கள் சந்திப்பாம்.. அடித்துவிட்ட நித்யானந்தா! கோட்டையில் நடந்தது என்ன?
சென்னை: தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், கைலாசா நாட்டு பிரதிநிதிகள் சென்னை தலைமை செயலகத்திற்கு வந்து அமைச்சர்களை சந்தித்தாக நித்யானந்தா கூறியுள்ளார். மேலும், அமைச்சர்கள் ஸ்ரீநாத், லோகேஷ், வன்னி அரசு ஆகியோரையும் சந்தித்தது தொடர்பான புகைப்படங்களையும் நித்யானந்தா பகிர்ந்துள்ளார். தூதரக ரீதியிலான சந்திப்பை மேற்கொண்டதாக கூறிய நிலையில் இது உண்மையில்லை என தலைமை செயலகம் விளக்கம் அளித்துள்ளது.
கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக கூறிவரும் நித்யானந்தா சமூக வலைத்தலங்களில் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு உரை நிகழ்த்தி வருகிறார். அதுபோக, தனது கைலாசா நாட்டு பிரதிநிதிகள் வெளிநாட்டு பிரநிதிகளை சந்தித்து இருப்பதாகவும் ஏதாவது போட்டோ போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அமைச்சர்களை சந்தித்த கைலாசா பிரதிநிதிகள்
இன்னும் டிரம்பை தான் கைலாசா பிரதிநிதிகள் சந்திக்கவில்லை என்று நெட்டிசன்கள் கேலி, கிண்டல் செய்து அவரது பதிவுகளுக்கு ரீப்ளே போட்டு வருவார்கள். இந்த சூழலில், நித்யானந்தா வெளியிட்டு இருக்க கூடிய புதிய பதிவு ஒன்றை கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதாவது, கைலாசா நாட்டு பிரதிநிதிகள் சென்னை தலைமை செயலகத்திற்கு வந்து அமைச்சர்களை சந்தித்தாக கூறியிருக்கிறார் நித்யானந்தா. அதோடு அமைச்சர்கள் ஸ்ரீநாத், லோகேஷ், வன்னி அரசு ஆகியோரையும் சந்தித்தது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். தூதரக ரீதியிலான சந்திப்பை மேற்கொண்டதாகவும், இந்த சந்திப்பின் போது யுனைட்டடு ஸ்டேட் ஆப் கைலாசா , கைலாசாவின் வரலாறு ஆகிய புத்தகங்களை அமைச்சர்களுக்கு அளித்தாகவும் நித்யானந்தா தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.
தலைமை செயலகம் விளக்கம்
நித்யானந்தாவின் இந்த பதிவு அரசியல் வட்டாரத்திலும் விவாதப்பொருளானது நித்யானந்தாவின் இந்த பதிவு பற்றி தலைமை செயலக வட்டாரத்தில் கேட்டபோது, நித்யானந்தா கதை விட்டது தெரியவந்துள்ளது. தலைமை செயலக வட்டாரத்தில் இது குறித்து கூறப்பட்டதாவது:-
"நித்யானந்தா கூறியது போல எந்த தூதரக ரீதியிலான சந்திப்பும் நடைபெறவில்லை. மனு கொடுப்பதற்காக தினமும் அமைச்சர்களை சந்தித்து வருகிறார்கள். அதேபோல வந்தவர் ஒருவர்தான், புத்தகத்தை கொடுத்து போட்டோ எடுத்து இருக்கிறார்கள். மற்றபடி நித்யானந்தா கூறியது போல எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என்று மறுத்தனர்.
யார் இந்த நித்யானந்தா?
திருவண்ணாமலையை சேர்ந்தவர் நித்யானந்தா. தன்னைத்தானே சாமியார் என சொல்லிக்கொள்ளும் நித்யானந்தா பெங்களூர் அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாடுகள் எழுந்தன. நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து வழக்குகள், சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா, 2010ல் கைதும் செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமினில் விடுதலையான அவர், தலைமறைவு ஆனார். கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவான நித்தியானந்தா தற்போது எங்கு இருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை.
கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக கூறி அதிர வைத்த நித்யானந்தா, அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே ஐநா கூட்டத்தில் கைலாசா பிரநிதிகள் பங்கேற்றதாகவும் நித்யானந்தா கூறியிருந்தார். ஈக்வடார் அருகே உள்ள தீவை விலைக்கு வாங்கி நித்யானந்தா இருப்பதாக கூறப்பட்டாலும் அவர் எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.















Click it and Unblock the Notifications