7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா? அண்ணாமலை சொன்ன பதில்!
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். அடுத்தடுத்து பல்வேறு விஷயங்கள் குறித்து மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள அண்ணாமலை, அடிப்படை கட்டமைப்பை உருவாக்காமல் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை We the Leaders என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பாக அண்ணாமலை தலைமையில் பொள்ளாச்சியில் போதை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 25 ஆயிரம் பேர் வரை இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அண்ணாமலைக்கு இது நல்ல தொடக்கமாகவே அமைந்தது.

2031ல் ஆட்சி மாற்றம் நடக்கும் என்றும் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்திருந்தார். இருப்பினும் அண்ணாமலை இந்த இடைத்தேர்தலில் களமிறங்குவாரா என்ற கேள்வி அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது. ஏனென்றால் தமிழ்நாட்டில் 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியாகக் கூடும்.
5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும், விரைவில் இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே இடைத்தேர்தலை நடத்த தவெகவும் தீவிரமாக இருக்கிறது. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அண்ணாமலை, தமிழ்நாடு அரசியல் சூழல் மாற வேண்டுமென்றால், இது அடிப்படை மாற வேண்டும். அப்படியான ஒரு மாற்றம் நிதானமாகவே நடக்கும். புதிய தலைமுறையினரை தலைவர்களாக உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். போதைப்பொருள் மாநாடு நடத்தியுள்ளோம். அடுத்ததாக பெண்கள் பாதுகாப்பு மாநாடு நடத்த இருக்கிறோம்.
பின்னர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். முக்கிய சமூக பிரச்சனைகளில் களமிறங்கி செயல்பட இருக்கிறோம். அதேபோல் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து தலைவர்களாக உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. இன்னும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் இருக்கின்றன. இதனை முடிக்காமல் தேர்தலில் கவனம் செலுத்த கூடாது என்பதே இப்போதைய நிலைப்பாடு என்று கூறியுள்ளார்.
இதனால் உள்ளாட்சித் தேர்தலில் அண்ணாமலை தரப்பு போட்டியிடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு பின் லோக்சபா தேர்தலிலும் அண்ணாமலை கட்சி போட்டியிடாது என்று பார்க்கப்படுகிறது. தவெக பாணியில் நேரடியாக சட்டசபைத் தேர்தலில் களமிறங்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications