E20 பெட்ரோல் வாகனங்களை பாதிக்குமா? "அடுத்தாண்டு முடிவுகள் தெரியும்.." மத்திய அரசு தகவல்
டெல்லி: பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் திட்டம் (E20) தற்போது சோதனை முறையில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது ஆண்டுக்குள் தெளிவாகத் தெரியும் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேநேரம் இது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் மாற்றம் வராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் இப்போது பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலந்து விற்கப்படுகிறது. முதலில் எத்தனால் அளவு 10% ஆக இருந்த நிலையில், இப்போது அது 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், எத்தனால் கலப்பதை அதிகரிப்பதால் பழைய வாகனங்கள் சேதமடையக்கூடும் என்றும் எரிபொருள் திறன் குறையக்கூடும் என்றும் பல்வேறு தரப்பும் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

எத்தனால் கலப்பு
இருப்பினும், E20 ரக பெட்ரோலால் வாகனங்களுக்கு இயந்திரக் கோளாறுகள் ஏற்படுகின்றன என்பதற்கான எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லை என்றும் இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, விவசாயிகள் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்குப் பெருமளவில் பயனளிக்கும் என்றும் மத்திய அரசு விளக்கம் கொடுத்து வருகிறது. இந்தச் சூழலில் தான் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.
அதாவது 2025-26 ஆண்டிற்கான எத்தனால் கலப்பு தொடர்பாகக் கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பாரத் பெட்ரோலியம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் மத்திய அரசின் இலக்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பாரத் பெட்ரோலியம் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
சோதனை முயற்சி
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, "2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே எத்தனால் விநியோக ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. அப்படியிருக்கும்போது தனியார் நிறுவனங்கள் இப்போது வந்து ஒதுக்கீடுகளை மீண்டும் பரிசீலனை செய்யச் சொல்வது இந்த திட்டத்தைச் சீர்குலைக்கக்கூடும். பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இதுபோன்ற மனுக்கள் நிலுவையில் உள்ளன. இது தேசிய கொள்கையைப் பாதிக்கும். 20 சதவீத எத்தனால் கலப்பதை அரசு சோதனை முறையில் செயல்படுத்த முயன்று வருகிறது. இதன் முடிவுகள் அடுத்த ஆண்டு தெரியவரும்" என்றும் அவர் தெரிவித்தார்.
மாற்ற முடியாது
இந்த வழக்கு தொடர்பாக பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, "பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பது என்பது அரசின் கொள்கை முடிவு.. இதில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை. நிறுவனங்களுக்குக் கிடைக்கும் எத்தனால் அளவு தேவை மற்றும் பிற காரணங்களைப் பொறுத்து இந்த அளவு மாற்றப்படலாமே தவிர, கலப்பு விகிதம் மாறாது" என்றார்.
20 சதவீத எத்தனால் கலப்பு என்ற திட்டத்தை மத்திய அரசு முதலில் 2030ல் தான் அமல்படுத்தத் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், திட்டமிட்ட காலத்திற்கு ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே 2025-இல் சாதித்துள்ளது. முதலில் இது ஆப்ஷனலாக இருந்த நிலையில், இப்போது ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் எத்தனால் கலந்த பெட்ரோலை விநியோகிக்கத் தொடங்கியுள்ளன. 2030ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 30 சதவீதம் எத்தனால் கலப்பதை மத்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு
E20 எரிபொருளைப் பயன்படுத்துவதால் வாகனக் காப்பீடு பாதிக்கப்படும் என்பதில் உண்மை இல்லை எனச் சொல்லியுள்ள மத்திய அரசு, அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் எத்தனால் கலப்பு என்பது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டு, இந்தியாவிற்கு 1.4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications