பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நயினார் நாகேந்திரனை நீக்க வேண்டும்.. திருமாறன் ஜி பரபரப்பு பதிவு
மதுரை: பாஜக மாநிலத் தலைமை மாற்றப்பட வேண்டும்; அவரோடு தற்போது இருக்கக்கூடிய அனைத்துப் பொறுப்பாளர்களும் மாற்றப்பட வேண்டும். இவர்கள் ஒரு சிண்டிகேட் போல் செயல்படுகிறார்கள். இவர்களால் கட்சிக்கு அழிவுதானே தவிர, முன்னேற்றம் இல்லை. பாஜக கட்சியின் சித்தாந்தத்தை எங்களைப் போன்றவர்கள், கட்சியை நேசிக்கும் அடிப்படை இளைஞர்கள், பாஜகவை வளர்ப்பதற்கு உயிரைக் கொடுத்து, இரத்தத்தைச் சிந்தி வளர்த்திருக்கிறோம். எங்களுடைய வரலாறு இவர்களுக்கெல்லாம் தெரியாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை கடுமையாக சாட்டியுள்ளார் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் கே.சி. திருமாறன் ஜி.
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் - கே.சி. திருமாறன் ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நீண்ட நாட்களாக அங்கம் வகித்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு காலத்தில் ஒரு மாண்பு இருந்தது; ஆனால், இப்பொழுது ஒரு மண்ணும் இல்லை. பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு ஜாம்பவான்கள் இருந்து இந்தக் கட்சியை வழிநடத்தியிருக்கிறார்கள். ஆனால், இன்று இருக்கக்கூடிய பாஜக தலைமைக்கு கட்சியை வளர்ப்பதற்கோ, கட்சியை முன்னேற்றுவதற்கோ எந்தச் சிந்தனையும் இல்லை. ஒரு கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்ற நாகரிகம் கூடத் தெரியாத தலைமைதான், இன்று தமிழ்நாட்டிலே பாஜக தலைமையாக இருந்து வருகிறது.

தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி, தேசத்தின் உன்னத தலைவன் திரு. நரேந்திர மோடிஜியின் கரத்தை வலுப்படுத்த மட்டுமே இந்த கூட்டணியில் உள்ளது; வேறெந்த ஆதாயமும் சுயநலமும் எங்களுக்கு இல்லை. இதுவரைக்கும் பாரதிய ஜனதா கட்சி எங்கள் கட்சிக்கு எந்த நலனும் செய்ததும் இல்லை. அப்படி இருந்தும் நாங்கள் ஏன் இந்த கூட்டணியில் அங்கம் வகித்தோம் என்றால்-இந்த தேசம் காப்பாற்றப்பட வேண்டும், தெய்வீகம் நிலைநாட்டப்பட வேண்டும், சனாதன தர்மம் மேலோங்க வேண்டும், இங்கே வாழக்கூடிய அனைத்து மக்களும் சந்தோஷமாக ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான். இந்த நாட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகளை எதிர்க்க வேண்டும் என்ற சித்தாந்தத்தில்தான் நாங்கள் இந்த கூட்டணியில் இருந்தோம்.
ஆனால், பாரதிய ஜனதா கட்சியில் இருக்கக்கூடிய தற்போதைய தலைமையோ... அவர் எங்கிருந்து வந்தார்? அவருடைய சித்தாந்தம் என்ன? அவர் கையில் இந்த பாரதிய ஜனதா கட்சியை ஒப்படைத்ததன் விளைவுதான், இன்று சட்டமன்றத் தேர்தலிலே யாரும் வெற்றி பெற முடியாத தொகுதிகளைக் கேட்டுப் பெற்று, நின்ற வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைவதற்குக் காரணமாக அமைந்தது. இதற்குத் தற்போதைய மாநிலத் தலைமைதான் காரணம்.
இவர்களை பாஜக தேசியத் தலைமை மாற்றவில்லை என்றால், தற்போது பாரதிய ஜனதா கட்சி 20 ஆண்டுகள் பின்தங்கிச் சென்றுவிடும். மேலும் கட்சி அழியாமல் இருக்க, பாஜக மாநிலத் தலைமை மட்டுமல்ல, தற்போது மாநிலப் பொறுப்பில் உள்ள அனைத்துப் பொறுப்பாளர்களையும் அடியோடு மாற்ற வேண்டும். "தேர்தல் என்று வந்துவிட்டால், இவர்கள்தான் நிற்க வேண்டும்; இவர்களைத் தாண்டி கட்சிக்காக உழைப்பவர்கள் யாருக்கும் எந்த சீட்டும் கொடுக்கக் கூடாது" என்ற அருமையான சித்தாந்தம் கொண்டவர்கள்தான் தற்போது இருக்கக்கூடிய மாநிலப் பொறுப்பாளர்கள். அடிப்படைத் தொண்டன் எப்போதுமே அடிப்படைத் தொண்டனாகவே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்; திமுக, அதிமுகவில் இருக்கும் கலாச்சாரத்தை பாஜகவிற்குள் இவர்கள் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
மேலும், எத்தனையோ இளைஞர்கள் எங்களைப் போன்றவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் மீது அன்பும் அக்கறையும் கொண்டிருக்கிறோம். நான் 2016-ஆம் ஆண்டிலிருந்து கூட்டணி தர்மம் மாறாமல் இதே கூட்டணியில் நீடித்து வந்தேன். ஆனால், இவர்கள் என்னை ஒருகாலத்திலும் மதித்ததில்லை. பல்வேறு கட்சிகளுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தவர்களைத் தங்கத் தொட்டிலில் வைத்துத் தாலாட்டுவதும், எங்களைப் போன்ற சித்தாந்தவாதிகளை உதாசீனப்படுத்துவதும்தான் இவர்களுடைய வேலையாக இருக்கிறது.
தற்போது வரைக்கும் நாங்கள் கூட்டணியில்தான் இருந்து வருகிறோம். ஆனால், என்னை இக்கூட்டணியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று-அதாவது, நானாகவே இந்த கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று-தேர்தல் காலத்தில் பல்வேறு இன்னல்களைக் கொடுத்தார்கள். பாஜகவை விட்டு பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளியேறுவதற்கும் இது போன்ற செயல்கள்தான் முக்கியமான காரணம்.
நான் முக்குலத்தோர் சமூகத்தினுடைய பிரதிநிதியாக மட்டுமல்லாமல், அனைத்துச் சமூகத்தாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவன் என்ற முறையில்... அனைத்து சமுதாயத்தின் நற்காரியங்களுக்கும், அவர்கள் சமூகத்திற்கான உரிமைக்காகவும் ஈடுபட்டு, அவர்களுக்காக வாதாடிப் போராடிய ஒருவன் என்ற முறையில், திரு. நரேந்திர மோடி ஜி, திரு. பி.எல். சந்தோஷ் ஜி, திரு. அமித் ஷா ஜி ஆகியோருக்கு ஒரு கோரிக்கையை வைக்கின்றேன்.
பாஜக மாநிலத் தலைமை மாற்றப்பட வேண்டும்; அவரோடு தற்போது இருக்கக்கூடிய அனைத்துப் பொறுப்பாளர்களும் மாற்றப்பட வேண்டும். இவர்கள் ஒரு சிண்டிகேட் போல் செயல்படுகிறார்கள். இவர்களால் கட்சிக்கு அழிவுதானே தவிர, முன்னேற்றம் இல்லை. பாஜக கட்சியின் சித்தாந்தத்தை எங்களைப் போன்றவர்கள், கட்சியை நேசிக்கும் அடிப்படை இளைஞர்கள், பாஜகவை வளர்ப்பதற்கு உயிரைக் கொடுத்து, இரத்தத்தைச் சிந்தி வளர்த்திருக்கிறோம். எங்களுடைய வரலாறு இவர்களுக்கெல்லாம் தெரியாது; நாங்கள் யார் என்பதும் தெரியாது. 1991-ஆம் ஆண்டிலிருந்து இந்து சனாதன தர்மத்திற்காகப் போராடி வருகின்ற ஒருவன் நான். ஆனால், இன்று இருக்கும் தலைமை எங்கிருந்து, எந்தச் சித்தாந்தத்தை ஏற்று இங்கே வந்துள்ளார் என்பதை உற்றுப் பாருங்கள்! நாங்கள் கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பதை இனி தேசியத் தலைமைதான் சிந்திக்க வேண்டும்" இவ்வாறு கே.சி. திருமாறன் ஜி கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications