ட்விஸ்ட்.. "மத்திய அமைச்சரவையில் மாற்றம் வேண்டாம்.." பாஜக எடுத்த முக்கிய முடிவு.. என்ன காரணம்?
டெல்லி: கடந்த சில வாரங்களாகவே மத்திய அமைச்சரவையில் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளதாக இணையத்தில் தகவல் பரவின. குறிப்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இலாகா மாற்றப்படலாம். தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட சிலர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படலாம் எனச் சொல்லப்பட்டது. இதற்கிடையே இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் நாடாளுமன்றம் கூடும் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஜூலை 3ஆவது வாரம் நாடாளுமன்றம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தான் மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரலாம் என்பது போலக் கடந்த சில நாட்களாகச் செய்திகள் வெளியானது.

குளிர்கால கூட்டத்தொடர்
இதற்கிடையே தற்போது வெளியான தகவலின்படி மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட வாய்ப்பு குறைவு எனத் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை மாற்றத்தை விட முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்கே மத்திய அரசு இப்போது முன்னுரிமை அளித்து வருகிறதாம். எனவே, இப்போதைக்கு அமைச்சரவை மாற்றம் இருக்காது என்றும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தான் கேபினட் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பாஜக திட்டம்
இந்த மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தொகுதி மறுவரையறை மற்றும் ஒரு நாடு ஒரு தேர்தல் ஆகிய முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தும் எனத் தெரிகிறது. இந்த நேரத்தில் அமைச்சரவையை மாற்றியமைத்தால், சில தலைவர்கள் அதிருப்தி அடையக்கூடும் என்பதாலேயே மத்திய அரசு யோசிக்கிறது. ஏனென்றால் இப்போது மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தாலும் கூட.. அரசியல் சாசன திருத்தத்திற்குத் தேவைப்படும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை. அது மட்டுமின்றி, இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தால் பிறகு அமைச்சரவையில் சேர்த்துக் கொள்கிறோம் எனச் சொல்லி, சில கட்சிகளை ஆதரவளிக்க வைக்கவும் முடியும் என பாஜக நம்புகிறது.
மோடி பிஸி
மேலும், பிரதமர் மோடியும் கூட மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி வரை பிஸியாகவே இருக்கிறார். ஜூலை 1 முதல் 3ஆம் தேதி வரை இந்தியா வரும் ஜப்பான் பிரதமரின் நிகழ்வுகளில் பிரதமர் மோடி பிஸியாக இருப்பார். தொடர்ந்து ஜூலை 4ம் தேதி ராஜஸ்தான் செல்லும் பிரதமர், ஜூலை 6 முதல் 11 வரை இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இடையில் ஜூலை 5 ஆம் தேதி மட்டுமே இருக்கிறது.. ஒருவேளை ஜூலை 20-க்குள் அமைச்சரவை விரிவாக்கம் அவசரமாகச் செய்யப்பட்டாலும் கூட, புதிய அமைச்சர்களுக்கும் அது சிக்கல் தான். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டுத் துளைப்பார்கள். அதற்குப் பதில் தர ரெடியாக போதிய காலஅவகாசம் இருக்காது. எதிர்கொள்ள தங்களின் துறைகளைத் தயார் செய்யப் போதிய நேரம் இருக்காது. இதையெல்லாம் யோசித்த பிறகே அமைச்சரவை மாற்றம் இப்போதைக்கு வேண்டாம் என்ற முடிவுக்கு பாஜக தலைமை வந்துள்ளதாக தெரிகிறது!
அமைச்சர்கள் மாற்றம்?
அமைச்சரவை மாற்றம் குறித்து வரும் பட்டியலில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இணை அமைச்சர்கள் ரவ்னீத் சிங் பிட்டு, பங்கஜ் சவுத்ரி, ஹர்ஷ் மல்ஹோத்ரா, ஜார்ஜ் குரியன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. அதேபோல நிர்மலா சீதாராமன் நிதித்துறையில் கல்வித்துறைக்கு மாற்றப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.














Click it and Unblock the Notifications