ஆதவ் அர்ஜுனாவை விடாத திமுக.. சிபிஐயிடமே நேரடியாக புகார்.. முதல்வர் விஜய் விசிட்டையும் கண்காணிக்கனும்
சென்னை: கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ உடனடியாக புதிய வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திமுக சிபிஐயிடம் மனு அளித்துள்ளது. முதல்வர் விஜய் கரூர் செல்வதை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவரே வழக்கின் போக்கை திசை திருப்பும் வகையில் பேசியுள்ளார்.. சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகிறார் எனவும் ஆர்எஸ் பாரதி கூறியுள்ளார். மேலும், ஆதவ் அர்ஜுனா பேச்சு அடங்கிய பென் டிரைவ், அது தொடர்பான செய்திகளை இணைத்து சிபிஐயிடம் ஆர்.எஸ் பாரதி வழங்கினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை. குறிப்பாக மருத்துவமனையில் அடுத்தடுத்து அனுமதிக்கப்படும் போது விஜய் சென்னைக்கு தப்பி ஓடிவந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு
நீண்ட நாட்கள் கழித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து அவர் விஜய் ஆறுதல் கூறினார். உங்களுக்கு எப்போதும் ஆறுதலாகவும், துணையாகவும் இருப்பேன் என்று விஜய் கூறியிருந்தார். தற்போது முதல்வராக ஆகியுள்ள நிலையில்,
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதற்காக வரும் 10 ஆம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்ல இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே தான் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூர் சம்பவத்தை குறிப்பிட்டு சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். ஆதவ் அர்ஜுனா பேச்சு உள்நோக்கத்துடன் இருப்பதாகவும், முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை விதிக்க வலியுறுத்தியும், திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விஜய் கரூர் செல்வது சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கக்கூடும் என்பதால், கரூர் வழக்கு முடியும் வரை அவர் மற்றும் அமைச்சர்கள் கரூர் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும்.
தள்ளுபடி செய்து உத்தரவு
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு பற்றி விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், முதல்வருக்கு நிர்வாக ரீதியிலான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? முதல்வர் விஜய் குற்றம்சாட்டப்பட்ட நபர் என எப்படி உங்களால் கூற முடியும்? திமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூட விஜய் குற்றம் சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்படவில்லையே? எனவே தயவு செய்து ஆவணங்களை சரியாக படித்து பார்த்துவிட்டு நீதிமன்றத்தில் பேசுங்கள் என காட்டமாக கூறினர்.
இதனைத் தொடர்ந்து திமுக தரப்பு மூத்த வக்கீல் ரஞ்சித் குமார் நீதிபதிகளிடம் மனுவை வாபஸ் பெறுவதற்கான கோரிக்கையை வைத்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த நிலையில் தான், கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ உடனடியாக புதிய வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திமுக தரப்பில் சிபிஐயிடம் மனு அளித்துள்ளது.
சிபிஐயிடம் திமுக புகார்
முதல்வர் விஜய் கரூர் செல்வதை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரே வழக்கின் போக்கை திசை திருப்பும் வகையில் பேசி இருக்கிறார். மேலும் சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகிறார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சிபிஐயிடம் புகார் மனு அளித்துள்ளார். மேலும், ஆதவ் அர்ஜுனா பேச்சு அடங்கிய பென் டிரைவ், அது தொடர்பான செய்திகளை இணைத்து சிபிஐயிடம் ஆர்.எஸ் பாரதி வழங்கினார்.














Click it and Unblock the Notifications