விஜய் தான் நம்பர் 1 குற்றவாளியா? வக்கீல் கூறியதும் நீதிபதி அப்செட்.. திமுக மனு தள்ளுபடியானது எப்படி?
டெல்லி: வரும் 10ம் தேதி முதல்வர் விஜய் கரூர் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க உள்ளார். இதற்கு தடை கோரி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த மனு மீதான விசாரணையின்போது திமுக தரப்புக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விஜய் தான் முதல் குற்றவாளி என்று திமுக வழக்கறிஞர் சொன்னதுமே இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை. மனுவை திரும்ப பெற்று கொள்ளுங்கள் என்று நீதிபதி கண்டித்தார். இந்த வழக்கில் என்ன நடந்தது? என்பது பற்றிய முழு விவரம் வருமாறு:
கடந்த ஆண்டு (2026) செப்டம்பர் மாதம் 27 ம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பரப்புரைக்கு சென்றார். அப்போது திடீரென்று கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர். இந்த வழக்கு பற்றி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு இந்த விசாரணையை கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் தான் தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் முதல்வர் விஜய் வெற்றி பெற்றார். இதையடுத்து, வரும் 10ம் தேதி முதல்வர் விஜய் கரூர் சென்று பலியானவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தான் சிபிஐ விசாரணை நடைபெறுவதை காரணம் காட்டியும், தவெக மூத்த அமைச்சர்கள் மீதான வழக்கு பதிவு செய்யப்பட்டதை காரணம் காட்டியும், முதல்வர் விஜய் கரூர் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ''ஜுலை 10ல் விஜய் கரூர் சென்று கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாகவும், பிற அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. கூட்ட நெரிசல் விவகாரம் பற்றி சிபிஐ விசாரணை நடக்கிறது. இவர்கள் முக்கிய சாட்சி என்பதால் ஆளும் கட்சி தலைவர்கள் நேரடியாக சந்திக்க உள்ளனர். இதனால் தடை விதிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கேவி விஸ்வநாதன், அலோக் ஆராதே அமர்வு இந்த மனு மீது விசாரணை மேற்கொண்டது. அப்போது திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஞ்சித் குமார், ''கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் திமுகவிற்கு எதிராக தவெக அமைச்சர்கள் 'நரேட்டிவ் செட்' செய்ய முயற்சிக்கின்றனர். இவர்களின் இந்த செயல் என்பது கடந்த ஆண்டு வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தபோது நீதிமன்றம் போட்ட உத்தரவுக்கு எதிராக அமைகிறது'' என்றார்.
இதையடுத்து நீதிபதி விஸ்வநாதன், ''முதல்வரின் பயணத்தை உச்சநீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் தான் அவரது பயணத்தை இறுதி செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு திமுக வழக்கறிஞர் ரஞ்சித் குமார், ''வழக்கின் நிலைமையை கருத்தில் கொண்டு முதல்வர் மற்றும் பிற அமைச்சர்கள் கருத்து தெரிவிக்க கூடாது என்று தான் கூறுகிறோம். அதேவேளையில் நிவாரணம் வழங்குவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை'' என்றார்.
இதற்கு நீதிபதி கேவி விஸ்வநாதன், ''ஓ அதனால் நீங்கள் கருத்துரிமைக்கு தடை வேண்டும் என்று கேட்கிறீர்களா? அவர்களின் பேச்சிற்கு நீங்கள் பதில் அளித்து 'கவுண்ட்டர்' செய்யலாம். சிபிஐ விசாரணை நடந்து வரும் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் எப்படி அரசியல் ரீதியிலான கருத்துகளுக்கு தடை விதிக்க முடியும்?.
மேலும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிப்பது? பணி ஆணை எப்படி விசாரணையை பாதிக்கும்?. இது நன்கு ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு தானே?'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு திமுக வழக்கறிஞர் ரஞ்சித் குமார், ''விஜய் இரண்டு ரோலில் உள்ளார். ஒன்று மாநில அரசின் தலைவர். இன்னொன்று இந்த வழக்கில் முதல் குற்றவாளி'' என்றார்.
இப்படி சொன்னதுமே நீதிபதி விஸ்வநாதன் குறுக்கீடு செய்தார். அப்போது அவர், ''யார் முதல் குற்றவாளி. நீங்கள் தாக்கல் செய்த மனு மற்றும் உங்களின் முந்தைய அரசு பதிவு செய்த முதல் முதல் தகவல் அறிக்கையில்(எப்ஃஐஆர்) விஜய்யின் பெயர் இல்லவே இல்லையே. உண்மையை சரிபார்த்து கொண்டு வரவும். நான் கூட தவறாக சொல்லியிருக்கலாம்'' என்றார்.
இதையடுத்து எதிர்தரப்பை சேர்ந்த (முதல்வர் விஜய் தரப்பு) மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், விஜய்யின் பெயர் எஃப்ஐஆர்-யில் என்பதை உறுதி செய்தார். இதை கேட்ட நீதிபதி விஸ்வநாதன் திமுக தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித் குமாரிடம், '' அமைச்சர்களாக உள்ளவர்கள் தான் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். முதலமைச்சர் அல்ல. இப்படி இருக்கும்போது நீதிமன்றத்தை எவ்வாறு அரசியல் மோதலுக்கான களமாக மாற்ற முடியும். இந்த வழக்கை விசாரிக்க இந்த அமர்வு விரும்பவில்லை. இதனால் மனுவை நீங்களே திரும்ப பெற்று கொள்ளுங்கள்''என்றார்.
இதையடுத்து இந்த மனு தள்ளுபடியான நிலையில் அதனை திமுக தரப்பு திரும்ப பெற்று கொண்டது. இருப்பினும் இதுதொடர்பாக சிபிஐ விசாரணையை கண்காணித்து வரும் ஓய்வு நீதிபதி அஜர் ரஸ்தோகி தரப்பிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர திமுக தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications