முதல்வர் விஜய்யை அக்யூஸ்டு என சொல்வதா? கரூர் வழக்கில் நீதிபதிகள் கண்டனம்
டெல்லி: முதல்வர் விஜய் கரூர் செல்ல எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், முதல்வரை அக்யூஸ்டு என சொல்வதா என கண்டித்தது. மேலும் திமுக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. இது திமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக முதல்வர் விஜய் சந்திப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சாட்சிகளை கலைக்கும் வகையில் பேசுவதாகவும் அவர்கள் கரூர் வழக்கு குறித்து பேச தடை விதிக்கவும் கோரியிருந்தார்.
மேலும் ஜூலை 10ஆம் தேதி முதல்வர் விஜய், கரூரில் உள்ள 41 பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து அரசாணைகள், கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வழங்கவுள்ளதாக மனுவில் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டிருந்தார்.
இந்த கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணையில் நிலுவையில் இருக்கும் நிலையில் இது போல் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்புகளை கொடுத்தால் அது அந்த வழக்கின் நகர்வை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அது போல் ஜூலை 2 ஆம் தேதி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பனையூரில் நடந்த ஒரு விழாவில் திமுகதான் போலீஸாரை ஏவி கொன்றதாகவும் அவர் பேசியுள்ளார். இது போன்று சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேச தடைவிதிக்க வேண்டும் என்றும் ஒரு மனு தொடரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா, ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முதல்வரின் பேச்சையும் செய்திகளையும் உச்சநீதிமன்றம்தான் கட்டுப்படுத்த வேண்டுமா?
நீங்கள் பேச்சுரிமைக்கு தடை விதிக்க கோருகிறீர்களா? அரசியல் எதிரிகளின் கருத்துக்கு நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? முதல்வர் விஜய்யை அக்யூஸ்டு என குறிப்பிடுவதா என நீதிபதிகள் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
மேலும் நீதிபதிகள். "உச்சநீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள். உங்கள் சண்டைகளை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் குற்றச்சாட்டு முன் வைத்தால் பதிலுக்கு திமுக தரப்பும் பேசிக் கொள்ளுங்கள். முதல்வருக்கு நிர்வாக ரீதியிலான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
எனவே முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை இல்லை. முதல்வரின் பேச்சு கருத்து சுதந்திரம், முதல்வரின் பேச்சை உச்சநீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என விரும்புகிறீர்களா? இந்த இடையீட்டு மனுவை வாபஸ் பெறுகிறீர்களா இல்லை தள்ளுபடி செய்யவா என கேள்வி எழுப்பினர். இதையடுத்து மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக திமுக தரப்பு தெரிவித்தது.












Click it and Unblock the Notifications