பவர் 167ஐ கையிலெடுத்த ஆளுநர்? குதிரை பேரம் பற்றி விஜய்யிடம் கேள்வி கேட்க முடிவு? ஆட்சிக்கு சிக்கல்?
சென்னை: முதல்வர் விஜயிடம் ஆளுநர் அர்லேகர் விரைவில் குதிரை பேரம் தொடர்பாக விளக்கம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக விஜய் தரக்கூடிய விளக்கத்தை பொறுத்து ஆளுநர் நடவடிக்கைகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசுக்கு எதிராக, அதிமுக, திமுக மற்றும் பாஜக ஆகியன குதிரை பேரம், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குதல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி, அக்கட்சியின் கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களைப் பல்வேறு ஆசை வார்த்தைகள், நிதி பரிமாற்றங்கள் மற்றும் மிரட்டல்கள் மூலம் தவெக அரசு தங்கள் கட்சிக்குள் இழுத்துள்ளது. இந்த ஜனநாயகப் படுகொலை குறித்து ஆளுநர் மௌனம் காக்கக் கூடாது, உடனடியாக சட்டப்பிரிவு 167-ன் கீழ் அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று கொற்கை வைத்தது.
இதேபோல் திமுக தரப்பிலிருந்து ஆர்.எஸ். பாரதி தலைமையிலான குழுவும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் தனித்தனியாக ஆளுநரைச் சந்தித்துத் தங்களின் புகார்களைப் பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில், தற்போது தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்கத் தயாராகி வருவதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர் எடுக்க போகும் ஆக்சன்
அதிமுகவின் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததும், முன்னாள் அமைச்சர்கள் பலரும் அணிவகுத்து கட்சி தாவியதும் தமிழக அரசியலில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியது. இதை குதிரை பேரம் என்று அதிமுக, திமுக கடுமையாக விமர்சனங்களை வைக்கிறது.
அதிமுகவில் இருந்து வரிசையாக மூத்த தலைவர்கள் பலர் தவெக தாவுவது அதிகரித்து வருகிறது. அதிமுகவைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகதம் குமாரவேல், எஸ். ஜெயகுமார், பி. சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அனைவரும் அறிந்ததே.
ஆளுநர் ஆக்சன்
இது தொடர்பாக ஆளுநரிடம் அதிமுக, திமுக தரப்புகள் புகார் அளித்து வருகின்றன. இந்தச் சூழலில், டெல்லிக்கு அவசரப் பயணம் மேற்கொண்டுவிட்டு சென்னை திரும்பியுள்ள ஆளுநர் அர்லேகர், விஜய் அரசிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளார். இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மிக முக்கிய அதிகாரமான சட்டப்பிரிவு 167ஐ ஆளுநர் பயன்படுத்த உள்ளதாக நம்ப தகுந்த ஆதாரங்கள் கூறுகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் டெல்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகளையும், சட்ட வல்லுநர்களையும் சந்தித்துப் பேசினார். எதிர்க்கட்சிகள் அளித்த தொடர் புகார்களின் மீதான சட்டப்பூர்வ சாத்தியக்கூறுகள் குறித்தே இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
டெல்லியிலிருந்து திரும்பிய உடனேயே, ஆளுநர் மாளிகையான ராஜ் பவன் இந்த விவகாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது.
வேகம் காட்டும் ஆளுநர்
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 167-ன் படி, மாநிலத்தில் நடைபெறும் ஆட்சி நிர்வாகம், சட்ட மசோதாக்கள் மற்றும் அமைச்சரவை முடிவுகள் குறித்த எந்தவொரு தகவலையும் முதல்வரிடம் கேட்டுப் பெறும் முழு அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் குதிரை பேரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு முதல்வர் விஜய்க்கு ஆளுநர் முறைப்படி கடிதம் அனுப்ப வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
டெல்லி ஆசியுடன் ஆளுநர் அர்லேகர் எடுக்கப் போகும் அடுத்தடுத்த நடவடிக்கைகள், தமிழக அரசியல் சூழலில் விஜய் அரசுக்கு ஒரு அக்னி பரீட்சையாக அமையும் வாய்ப்புகள் உள்ளன.














Click it and Unblock the Notifications