மக்கள் பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்! ஆளுநர் அர்லேக்கர் பேச்சால் புது சர்ச்சை
சென்னை: மதுரையில் மக்கள் நல திட்டங்களை ஆளுநர் அர்லேக்கர் ஆய்வு செய்திருந்தது சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில், தற்போது மக்கள் பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம் என ஆளுநர் பேசியிருப்பது புது பஞ்சாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆளுநர், "மக்கள் பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம். வாக்களித்த மக்களால் பிரச்சனைகளை உணரவும் முடியும்; தீர்வுகளை சொல்லவும் முடியும். மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தவெக அரசுடன் இணைந்து செயல்படுவேன். அவசியம் எனில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வரிடம் வலியுறுத்துவேன். அரசிடமும் எதிர்பார்ப்பு இருந்தால் கூறுங்கள்.. நாம் இணைந்து செயல்படுவோம். நமது சமூகத்தில் நல்லிணக்கம் இல்லாமல் போதுதான் பெரிய பிரச்சனை" என்று பேசியிருக்கிறார்.

ஆளுநர் vs அரசு
தமிழகத்தில் தேர்தலுக்கு பின்னர் அரசியல் சலசலப்புகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. அதிலும் ஆளுநர் விவகாரம் பற்றி சொல்லவே வேண்டாம். ஆட்சி அமைக்க அனுமதி கேட்டு முதல்வர் விஜய் ஆளுநர் மாளிகைக்கும், பனையூர் அலுவலகத்திற்கும் அலைந்தே சலித்து போனார். சரி ஆட்சிதான் அமைந்துவிட்டது.. இனி பிரச்சனை இருக்காது என்று நினைத்தவருக்கு அடுத்தடுத்த தலைவலிகளை ஆளுநர் தரப்பு கொடுத்திருக்கிறது.
மதுரை ஆய்வும் பஞ்சாயத்தும்
அதாவது மதுரையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆளுநர் அர்லேக்கர், சௌராஷ்டிரா கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றிருந்தார். அங்கு மாணவர்களிடம் பேசிய அவர், "துப்பாக்கியை தூக்கிக்கொண்டு போருக்கு போவது மட்டும் தேசபக்தி கிடையாது. நதிகளை மீட்டு எடுப்பதும் தேசபக்திதான். மதுரை வைகை நதியை பார்த்தேன். நதி இருக்கிறது.. ஆனால், தண்ணீர் எங்கே? இளைஞர்கள் நதியை மீட்டு எடுக்க முன்வர வேண்டும். வைகை நதியை யாரும் சீரமைக்காவிட்டால் நேரடியாக ஆளுநர் மாளிகையே களமிறங்கும்" என்று கூறியிருந்தார்.
மட்டுமல்லாது மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகர ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சேர்ந்து நலத்திட்டங்களையும் ஆய்வு செய்திருந்தார்.
ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு
நலத்திட்டங்களை ஆளுநர் ஆய்வு செய்தது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. மக்கள் ஆட்சி தானே நடந்துக்கொண்டிருக்கிறது.. ஆளுநர் எதற்காக ஆய்வு செய்ய வேண்டும்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியருந்தனர். எதிர்க்கட்சிகளை தாண்டி தவெகவுக்கு ஆதரவு அளித்த சிபிஎம், சிபிஐ, விசிகவும் இந்த விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. பின்னர் அமைச்சர் நிர்மல் குமாரும் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இப்படி இருக்கையில், மக்கள் தங்கள் பிரச்சனையை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம் என்று ஆளுநர் பேசியிருப்பது, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications