"எனக்கு இனி Sympathy வேண்டாம்... Empathy மட்டும் போதும்!"... உருக்கமாக பேசிய ரவி மோகன்
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் எந்த சர்ச்சைகளிலும் சிக்காத நடிகர்களில் ஒருவராக ரவி மோகன் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி, சமூக வலைதளங்களில் தினமும் பேசப்படும் விஷயமாக மாறிவிட்டது.
முதலில் அவரது குடும்ப வாழ்க்கை தொடர்பான பிரச்சனைகள் வெளிச்சத்துக்கு வந்தது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, விவாகரத்து தொடர்பான தகவல்கள், குழந்தைகள் குறித்து இரு தரப்பும் கூறிய கருத்துகள் என அந்த விவகாரம் நீண்ட நாட்கள் இணையத்தில் விவாதமாக இருந்தது.
தோழியின் பிரிவு
அதன் பிறகு, பாடகி கெனிஷாவுடன் (Kenishaa) ரவி மோகன் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலானது. இருவரையும் பற்றி பலவிதமான கருத்துகள் பரவின. அந்த சூழ்நிலையிலேயே, திடீரென "நான் ரவி மோகனை விட்டு விலகுகிறேன்" என்று கெனிஷா வெளியிட்ட அறிக்கையும் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர்கள் சந்திப்பு
அதன்பிறகு முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், இதுவரை பேசாமல் இருந்த பல விஷயங்களை வெளிப்படையாக கூறினார். அப்போது, "என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நான் சந்திக்கும் பிரச்சனைகள் யாருக்கும் தெரியாது. என்னுடைய குழந்தைகளை கூட பார்க்க முடியாத நிலை வந்திருக்கிறது. ஒரு தந்தையாக அது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. எல்லாரும் ஒரு பக்கம் மட்டும் கேட்டு தீர்ப்பு சொல்லாதீர்கள்" என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தார்.
திருட்டு புகார்
அந்த பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், சில நாட்களிலேயே அவரது வீட்டை சுற்றியும் புதிய சர்ச்சைகள் எழுந்தன. அதாவது ரவி மோகன் அவருடைய வீட்டில் வேலை பார்த்த பெண்களை வீட்டில் பூட்டி வைத்திருப்பதாக செய்திகள் வெளியானது. அதே நேரத்தில், தனது வீட்டில் நகை மற்றும் பணம் திருடு போனதாக ரவி மோகன் தரப்பில் தகவல்கள் வெளியானது. அந்த விவகாரமும் பரபரப்பாக பேசப்பட்டது.
இப்படியாக ஒரு பிரச்சனை முடிவதற்குள் இன்னொரு சர்ச்சை என தொடர்ந்து ரவி மோகனின் பெயர் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது.
ரவி மோகன் பேச்சு
இந்த சூழ்நிலையில்தான் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசிய சில வார்த்தைகள் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த நிகழ்ச்சியில் பேசிய ரவி மோகன், "வாழ்க்கையில் நான் தடுமாறிய நேரத்தில் என்னை அன்பால் தாங்கிப் பிடித்தீர்கள். சினிமாவே வேண்டாம் என்று நான் முடிவு செய்தபோது, மீண்டும் என்னை நடிக்க வைத்ததும் நீங்கள்தான். உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஆனால் இனிமேல் எனக்கு சிம்பத்தி (sympathy) வேண்டாம்... எம்பத்தி (Empathy) மட்டும் போதும்" என்று உருக்கமாக பேசினார்.
இந்த ஒரு வரிதான் இப்போது ரசிகர்களிடம் அதிகமாக பேசப்படுகிறது. "சிம்பத்தி" என்றால் ஒருவரைப் பார்த்து பரிதாபப்படுவது. ஆனால் "எம்பத்தி" என்றால் அவருடைய நிலையை புரிந்துகொண்டு உணர்வுடன் அணுகுவது. அதைத்தான் ரவி மோகன் கேட்டிருக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அவரது இந்த பேச்சை பார்த்த ரசிகர்கள் பலரும், "கடந்த சில மாதங்களாக ரவி மோகன் மீது ஏராளமான விமர்சனங்கள் வந்தன. ஆனால் அவர் சந்தித்த மன அழுத்தம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. அதனால்தான் சிம்பத்தி வேண்டாம், என்னுடைய சூழ்நிலையை புரிந்துகொள்ளுங்கள் என்று அவர் சொல்கிறார்" என்று ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.














Click it and Unblock the Notifications