Karur Stampede: கரூர் வழக்கில் கணக்கு தீர்ப்போம்னு பேசுவதா? ஆதவ்விற்கு சிபிஐ கண்டனம்
சென்னை: கரூர் சம்பவத்தை சுட்டிக் காட்டி கணக்கு தீர்க்காமல் விடமாட்டோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது ஏற்புடையது அல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த இணைப்பு விழாவில்தான் ஆதவ் இவ்வாறு பேசியிருந்தார்.

இதுகுறித்து வீரபாண்டியன் கூறியிருப்பதாவது: கரூர் சம்பவத்தில் கணக்கு தீர்க்காமல் விடமாட்டோம் என ஆதவ் பேசியிருப்பது ஏற்புடையது அல்ல. கணக்கு தீர்ப்போம் என பேசியிருப்பது ஆதவ் வகிக்கும் அமைச்சர் பொறுப்புக்கு பெருமை சேர்க்காது.
அரசியல் தளத்தில் நாகரீகத்தையும் உயர்ந்த பண்பாட்டையும் ஆதவ் அர்ஜுனா பேணிக் காக்க வேண்டும். அதே நேரம் முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதும் தவறு. இவ்வாறு வீரபாண்டியன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அன்று மாமல்லபுரத்தில் விஜயபாஸ்கர்'ஸ் தவெகவில் இணையும் விழா பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில் 10 ஆயிரம் பேர் தவெகவில் இணைந்ததாக சொல்லப்படுகிறது.
சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், திருச்சி வளர்மதி, ஆனந்தன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர். அப்போது ஆதவ் அர்ஜுனா பேசுகையில் கரூரில் தவெகவிற்கு ஒரு கணக்கு உள்ளது. அந்த கணக்கை முடிக்காமல் தவெக விடாது. கரூர் சம்பவத்தின் அனைத்து உண்மைகளும் வெளியே வரும்.
கரூரில் காவல் துறையினரை வைத்து கூட்ட நெரிசலை ஏற்படுத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்தார்கள். கரூரில் கூட்ட நெரிசலை ஏற்படுத்தியது திமுகவின் திட்டமிட்ட சதி!
மீண்டும் கூட்ட நெரிசலை உருவாக்க திமுக முயன்றதால்தான் விஜய் பிரச்சாரங்களுக்கு செல்லவில்லை. கடலூருக்கும் அவர் செல்லவிருந்த நிலையில் அதை ரத்து செய்தோம். திமுக ஆட்சியில் 14 மாவட்டங்களில் விஜய் பங்கேற்கும் கூட்டங்களில் நெரிசலை உருவாக்க சதி திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
கரூர் மக்கள் கண்ணீரின் பாவம்தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார். முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தின் கடைசி முதல்வர் ஸ்டாலின்தான். தவெக ஆட்சியில் இனி யாருடைய தலையீடும் இருக்காது.
சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அசிங்கப்படுத்திய திமுகவினருடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க எடப்பாடி பழனிசாமியும் அவரது மகன் மிதுனும் முயற்சித்தது அதிமுகவினருக்கு பிடிக்கவில்லை, அதனால் அதிமுகவில் இருந்து பலர் விலகி தவெகவுக்கு வந்துவிட்டார்கள்.
அதிமுகவில் 99 சதவீதம் பேர் தவெகவுக்கு வருவார்கள். அங்கு எடப்பாடியும் அவரது மகனும் மட்டும்தான் இருப்பார்கள். ஓபிஎஸ்ஸாவது கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டார். அவரை துரோகி என சொன்ன எடப்பாடி பழனிசாமி அதிமுகவையே திமுகவிடம் அடமானம் வைக்க முடிவு செய்திருந்தார்.
திமுகவும் அதிமுகவும் இணைந்து உள்ளாட்சி தேர்தல் அல்லது லோக்சபா தேர்தலில் கூட்டணியை அறிவிக்க போகிறார்கள். கரூர் சம்பவத்தில் எங்கே உண்மை வெளியே வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க திமுக முடிவு செய்துவிட்டது. தவெக எம்எல்ஏவுக்கு போனை போட்டதுமே அவர் போலீஸுக்கு போன் போட்டுவிட்டார். இவ்வாறு ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய், கரூர் வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் நடந்தது. அப்போது இரவு 7 மணிக்கு விஜய் சென்ற போது அவரை பார்ப்பதற்காக அங்கிருந்தவர்கள் முண்டியடித்த போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தில் விஜய் மீது திமுகவும், திமுகவின் திட்டமிட்ட சதி என தவெகவும் விமர்சித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications