"44 வயசுதான்... ஆனா காப்பாற்ற முடியல!"... மூளை கட்டியால் உயிரிழந்த பிரபல நடிகர்! கலங்க வைத்த சோக செய்தி
சென்னை: திரையுலகில் சமீப காலமாக இளம் வயதிலேயே பிரபலங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது கன்னட சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் பிரபலமாக இருந்த படுகௌடா (பத்மநாப் கே.எம்.) உயிரிழந்த செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது வெறும் 44.
ரியாலிட்டி நிகழ்ச்சி பிரபலம்
மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய படுகௌடா, பின்னர் கன்னட தொலைக்காட்சி உலகில் காலடி எடுத்து வைத்தார். இயல்பான பேச்சு, காமெடி கலந்த நடிப்பு, எளிமையான குணம் ஆகியவற்றால் கொஞ்ச நாளிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக கன்னடத்தில் ஒளிபரப்பான 'பாட்டே மண்டி கடிகே பந்துரு' ரியாலிட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட பிறகுதான் அவருக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது.

சின்னத்திரை பிரபலம்
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்தார். சின்னத்திரையில் பிஸியாக இருந்த அவர், திரைப்படங்களிலும் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று வந்தார். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக இருந்த அவர், மனைவி மற்றும் மகளுடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பரிசோதனை செய்தபோது, அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. அதன்பிறகு பல கட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவர்கள் தங்களால் முடிந்த சிகிச்சைகளை அளித்தும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததாக கூறப்படுகிறது.
வருத்தத்தில் ரசிகர்கள்
இறுதியில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 44 வயதிலேயே அவர் உயிரிழந்தது கன்னட திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவரது மறைவு செய்தி வெளியானதும், சின்னத்திரை நடிகர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். "எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்த மனிதரை இப்படி வழியனுப்ப வேண்டி வரும் என்று நினைக்கவே இல்லை", "இவ்வளவு சீக்கிரம் பிரிந்து செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை" என்று பலரும் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
சமீப காலமாக இளம் வயதிலேயே புற்றுநோய், மாரடைப்பு, மூளைக் கட்டி போன்ற உடல்நலப் பிரச்சனைகளால் பல கலைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாக்யராஜ் இறப்பு பெரிய அளவில் ரசிகர்களை வருத்தமடைய செய்தது. அதே கவலையை மீண்டும் இந்த செய்தியும் ஏற்படுத்தியுள்ளது.
திரையில் சிரிக்க வைத்த ஒரு கலைஞர், நிஜ வாழ்க்கையில் அமைதியாக விடைபெற்றிருக்கிறார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த இழப்பு நீண்ட நாட்களுக்கு மறக்க முடியாத வேதனையாகவே இருக்கும்.














Click it and Unblock the Notifications