‘பாப்பானுக்கு பதில்’.. ஆர்எஸ் பாரதி கூறியது என்ன.. அமைச்சர் ரமேஷ் போட்ட அதிரடியான பதிவு என்ன?
சென்னை: பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது என்று விமர்சித்துள்ளார் அமைச்சர் ரமேஷ்.
அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று கைது செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி பேசும் போது, அவதூறு பேச்சுக்காக முன்னாள் அமைச்சர் ஒருவரை கைது செய்வது காட்டுமிராண்டித்தமானது. இது சர்வாதிகாரத்தின் உச்சம். சட்ட ரீதியாக சந்திப்போம். தி.மு.க ஆட்சியில் அவதூறு வழக்கில் யாரும் கைது செய்யப்பட்டது இல்லை. அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றார். கரூர் சம்பவத்துக்கு தி.மு.கவே காரணம் என நேற்று மாற்றுக்கட்சியினர் த.வெ.க.வில் இணையும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, கரூரில் என்ன நடந்தது என்பது உள்ளூர் மக்களுக்கு தெரியும் என கூறினார்.

மேலும் அமைச்சராக இருக்கும் ஆதவ் அஅர்ஜுனாவின் பேச்சு கீழ்த்தரமாக, பொறுப்பற்ற முறையில் உள்ளது என்றும் கூறினார். நிர்மல் குமாரை கடுமையாக கண்டித்தார். அதேபோல் பாப்பா மாடல் என்று விமர்சித்த அமைச்சர் ரமேஷையும் கண்டித்தார். அப்போது ஆர்எஸ் பாரதி பாப்பாவுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்றார். ஆனால் அவரது மொழி உச்சசரிப்பு பாப்பானுக்கு என்பது போல் இருந்தது. இதனால் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்எஸ் பாரதி, பாப்பாவுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று தான் கூறினேன். டோன் சரியில்லை என்று வேறுமாதிரி போட்டுவிடாதீர்கள் என்றார். ஆனால் சில ஊடங்களில் பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று கூறியதாக செய்திகள் பரவியது.
இதனை பார்த்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இதுபற்றி வெளியிட்ட பதிவில், "பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா? சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அஞ்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான்.
உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை.
எங்கள் மாண்புமிகு முதல்வர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வழியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம். சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது.
கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது!" இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்..














Click it and Unblock the Notifications