அனிதா ராதாகிருஷ்ணனிடம் நடத்திய 5 மணி நேர பேரம் அசிங்கத்தில் முடிந்தது.. திமுக வழக்கறிஞர் விமர்சனம்
தூத்துக்குடி: அவதூறு வழக்குகளில் பொதுவாக யாரையும் கைது செய்து சிறையில் அடைக்க முடியாது என்று தெரிந்தும் ஏன் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து அழைத்து சென்றார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார் திமுக வழக்கறிஞர் அலிம் அல்புகாரி.. பேரம் பேச தான் அழைத்து சென்றார்கள் என்றும் 5 மணி நேர பேரம் அசிங்கத்தில் முடிந்துவிட்டது என்றும், கைது செய்தது அவமானத்தில் முடிந்துவிட்டது என்றும், குதிரை பேரம் சந்தி சிரிச்சிருச்சு என்றும் திமுக வழக்கறிஞர் அலிம் புகாரி தனது எக்ஸ் தள பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைது ஏன்
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடந்த மாதம் 20-ந் தேதி நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர், த.வெ.க. தலைவரும், முதல்வருமான விஜய்யை ஒருமையிலும், அவதூறாகவும் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருந்தார். மேலும் நடிகையுடன் தொடர்புபடுத்தியும் அவதூறாக பேசியிரந்தார். இதுகுறித்து ஆத்தூர் த.வெ.க. நகர செயலாளர் செல்வகுமார் அளித்த புகாரின்பேரில், ஆத்தூர் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மீது பி.என்.எஸ். 352, 353/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று காலை சுமார் 10.45 மணிக்கு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில், "அமைச்சராக பதவி வகித்த அனிதா ராதாகிருஷ்ணன் கட்டுப்பாட்டுடன் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருந்திருந்தால், இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டிருக்கும். அதனால், அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது" என்று வாதிடப்பட்டது.
நீதிபதி கேள்வி
அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய விவரங்கள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டது. இதை படித்து பார்த்த நீதிபதி, "1967-ம் ஆண்டுக்கு பின் தமிழ்நாட்டில் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் தான் ஆட்சி செய்திருக்கிறார்கள். நாம் தான் வாக்களித்து அவர்களை தேர்ந்தெடுத்தோம். மனுதாரர் சாதாரண குடிமகன் அல்ல. எம்.எல்.ஏ.வாக உள்ளவர். முதல்வருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியாதா? அவர் ஏன் இதுபோல பேச வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார். பின்னர், அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
45 நிமிடத்தில் கைது
இதையடுத்து தீர்ப்பு வந்த 45 நிமிடத்திலேயே திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வை உடனே கைது செய்வதற்கு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டார்கள். அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று காலையில் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரென்சீஸ் மற்றும் போலீசார் வந்து, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வை கைது செய்து அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். உடனே அனிதா ராதாகிருஷ்ணன், "எனது வக்கீல் இங்கு வந்தால்தான் நான் உங்களுடன் வருவேன்" என்று பிடிவாதமாகக் கூறினார்.
லாவகமாக சென்ற ஜீப் டிரைவர்
சிறிது நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு அனிதா ராதாகிருஷ்ணன், "எனது காரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு வருகிறேன்" என்று கூறி தனது காரில் ஏறி அமர்ந்தார். ஆனால் அதற்குப் போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். அவரை காரில் இருந்து போலீசார் கீழே இறக்கி தங்களது ஜீப்பில் ஏற்றினர்.
அங்கிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து, போலீஸ் ஜீப்பின் முன்பாக அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் போலீசாரைக் கண்டித்தும், தமிழக அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். ஆனால் அனிதா ராதாகிருஷ்ணன் இருந்த போலீஸ் ஜீப்பை டிரைவர் லாவகமாக சற்று விலக்கி அங்கிருந்து ஓட்டிச் சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தவெகவில் சேருமாறு வற்புறுத்தல்
மருத்துவ பரிசோதனை முடித்துவிட்டு சுமார் ஐந்து மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணனை ஆஜர்படுத்த அழைத்து சென்றார. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், என்னை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி போலீசார் நெருக்கடி தந்தார்கள். த.வெ.க.வில் சேரச்சொல்லி என்னை போலீசார் நிர்பந்திக்கிறார்கள். நான் ஒத்துக்கொள்ளவில்லை. நான் ராஜினாமா செய்ய மாட்டேன். தி.மு.க.வில் உறுதியாக இருப்பேன். விஜய்யை மட்டுமல்ல, யாரையும் எதிர்ப்போம். காவல்துறை அராஜகம் செய்கிறது என கூறினார்.
நீதிமன்றத்தில் வாதம்
பின்னர் அனிதா ராதாகிருஷ்ணனை திருச்செந்தூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர் அவரிடம், மாஜிஸ்திரேட் ஒன்றரை மணிநேரம் விசாரணை நடத்தினார். அனிதா தரப்பு வாதிடுகையில், " கைது நடவடிக்கையானது சட்டப்பிரிவு 41-இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி செய்யப்படவில்லை , எனது உடல்நிலை குறித்துப் போதிய கவனம் செலுத்தப்படவில்லை, முதல் சம்மனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், இரண்டாவது சம்மனுக்குத் தங்களது வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பினோம் . ஜூலை 10 அன்று விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகுவோம் என்று கூறியிருந்தோம். ஆனால் அதற்கு முன்பே தேடி வந்து கைது செய்தது தேவையற்றது" என்று தெரிவிக்கப்பட்டது.
சொந்த ஜாமீன் தந்த நீதிபதி
இதனை தொடர்ந்து, அனிதா ராதாகிருஷ்ணனை சொந்த ஜாமீனில் விடுவித்து திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். ரூ.10 ஆயிரம் செலுத்தி விட்டு சொந்த ஜாமீனில் செல்லும்படி உத்தரவிட்ட அவர், 10 நாட்களுக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் நீதிமன்ற காவலுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் அனுப்பப்படவில்லை..
திமுக வழக்கறிஞர் கருத்து
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக வழக்கறிஞர் அலிம் அல்புகாரி அவதூறு வழக்குகளில் பொதுவாக யாரையும் கைது செய்து சிறையில் அடைக்க முடியாது என்று தெரிந்தும் ஏன் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து அழைத்து சென்றார்கள் என்று கேள்வி எழுப்பினார். பேரம் பேச தான் அழைத்து சென்றார்கள் என்றும் 5 மணி நேர பேரம் அசிங்கத்தில் முடிந்துவிட்டது என்றும், கைது செய்தது அவமானத்தில் முடிந்துவிட்டது என்றும், குதிரை பேரம் சந்தி சிரிச்சிருச்சு என்றும் திமுக வழக்கறிஞர் அலிம் புகாரி தனது எக்ஸ் தள பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்.














Click it and Unblock the Notifications