சென்னையில் ஐடி புரட்சி! 26 ஆண்டுக்கு முன்பு கருணாநிதி-வாஜ்பாய் இணைந்து திறந்த டைடல் பார்க்
சென்னை: 26 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் டைடல் பூங்கா உருவாக்கப்பட்ட தினம் இன்று என கூறி எம்பி தயாநிதி மாறன் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். இதை திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: 26 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (4.07.2000) அன்று, நவீன தமிழகத்தின் தந்தை, அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழு முயற்சியால் உருவாகி, சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள Tidel Park எனும் மென்பொருள் பூங்காவை இந்தியப் பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய் அவர்கள் திறந்துவைத்த நாள் இன்று! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விழாவிற்கு தலைமை தாங்கிய கருணாநிதி பேசுகையில், தொடக்க நிலையிலேயே இந்த டைடல் பூங்கா மிகச் சிறந்த வெற்றி பெற்றதால் மிக விரைவில் சென்னையில் இரண்டாவது டைடல் பூங்கா திட்டத்தை செயல்படுத்துவோம்.
தகவல் தொழில்நுட்ப புரட்சியில் தமிழகம் மிகவும் காலதாமதமாக நுழைந்தாலும் கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் (1996-2001) குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என அவர் பேசியிருந்தார்.
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என சொல்லலாம். அவரது ஆட்சிக் காலத்தில்தான் சென்னை தரமணியில் டைடல் பார்க் எனப்படும் ஐடி பார்க் அமைக்கப்பட்டது.
இது ஆசியாவிலேயே மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் ஒன்று ஆகும். டைடல் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். தமிழக அரசு தொழில் வளர்ச்சி நிறுவனமான TIDCO மற்றும் எல்காட் நிறுவனம் ஆகிய இரண்டும் கூட்டாக இணைந்து உருவாக்கியதால் TIDCO+ ELCOT = TIDEL என பெயரிடப்பட்டது.
இந்த டைடல் பார்க் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் திறந்து வைத்தார். சுமார் 1.28 மில்லியன் சதுர பரப்பளவில் 12 மாடிகளுடன் இந்த கட்டடம் அமைக்கப்பட்டது.
இங்கு தடையில்லா மின்சாரம், அதிவேக இணையதள தொடர்பு, நவீன பாதுகாப்பு வசதிகள், உணவகங்கள் அமைந்துள்ளன. இந்தியாவின் முதல் நுண்ணறிவு கட்டடங்களில் டைடல் பார்க்கும் ஒன்று.
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் படித்தவர்கள் அது தொடர்பான வேலைக்கு பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட வேறு மாநிலங்களுக்கு சென்று வந்த நிலையில் டைடல் பார்க் தொடங்கப்பட்டதும் சென்னையிலேயே பலர் பணி செய்யும் சூழல் ஏற்பட்டது.
இதன் வெற்றியை தொடர்ந்து கோவையில் மிகப் பெரிய டைடல் பார்க் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. அது போல் விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட இடங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை இந்தியாவின் மென்பொருள் தலைநகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அது போல் ஓஎம்ஆர் சாலையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் வந்ததால் அந்த பகுதியை ஐடி காரிடார் என அழைக்கிறார்கள். இதற்கு விதை போட்டது கருணாநிதியாவார்.
தமிழக இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி சென்னையை ஒரு பிரம்மாண்ட ஐடி நுழைவுவாயிலாக மாற்றிய பெருமை அவரையே சாரும். ஐடி புரட்சி மட்டுமல்லாமல் சென்னை உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்களையும் அவர் கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications