47 வயதில் பரிதாபமாக இறந்த நடிகர்.. இவருக்கா இப்படி இறப்பு வரணும்? வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ் திடீரென உயிரிழந்த சம்பவம், திரையுலகையே உலுக்கியுள்ளது. 47 வயதான அவர், மே 13ஆம் தேதி அதிகாலை தனது இல்லத்தில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.

துயர செய்தி
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், மருத்துவர்களின் முயற்சிகள் பலனளிக்காமல் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தவர் இவ்வாறு திடீரென உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் திலீப்ராஜ் பயணம்
திலீப் ராஜ் தனது கலைப்பயணத்தை நாடக மேடையிலிருந்து தொடங்கி, தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார். "ஜனனி", "அர்த்த சத்யா", "ரங்கோலி", "குங்கும பாக்யா", "மங்கல்யா", "மலேபில்லு", "ரதசப்தமி" உள்ளிட்ட பல தொடர்களில் நடித்ததன் மூலம், அவர் வீடு தோறும் அறிமுகமான முகமாக மாறினார். இயல்பான நடிப்பு, எந்த கேரக்டராக இருந்தாலும் அதுவாகவே மாறிய அவருடைய தனித்தன்மையால் மக்கள் மத்தியில் தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

தனித்துவமான நடிப்பு
திரைப்படங்களிலும் திலீப் ராஜ் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், துணை வேடங்கள் என எந்த வேடமாக இருந்தாலும் அதனை நம்ப வைக்கும் வகையில் நடித்தவர். 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததுடன், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும், டப்பிங் கலைஞராகவும் தன்னை பல துறைகளில் நிரூபித்தார். சினிமா, சின்னத்திரை, நாடகம் என கலை உலகின் பல தளங்களில் அவர் செய்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
மக்கள் மனதில்
அவருடன் பணியாற்றிய பலரும் திலீப் ராஜ் பற்றி பேசும்போது, மிக எளிமையானவர், அனைவரிடமும் அன்பாக பழகுபவர் என்று சொல்கின்றனர். மனித நேயத்துடன் பலருக்கும் உதவிகளையும் செய்து இருக்கிறாராம்.
அவரது திடீர் மறைவு குறித்து கன்னட திரையுலகின் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் துயரத்தை பகிர்ந்து வருவதுடன், "இவ்வளவு சீக்கிரம் இப்படி பிரிந்துவிடுவார் என்று நினைக்கவில்லை" என்று உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
மொத்தத்தில், இன்னும் பல ஆண்டுகள் கலை உலகில் சாதிக்க வேண்டிய நிலையில் இருந்த திலீப் ராஜ் இவ்வாறு திடீரென உயிரிழந்தது, கன்னட சினிமா மற்றும் தொலைக்காட்சி துறைக்கு மிகப்பெரிய, நிரப்ப முடியாத இழப்பாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications