செந்தில் பாலாஜி, அசோக்குமார் 5 நாட்களாக தலைமறைவு? பெற்றோரிடம் சம்மன் அளித்த சென்னை போலீஸ்
கரூர்: தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் ஆஜராகுமாறு சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் சம்மன் அளித்துள்ளனர்.
இந்த சம்மனை கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள அவர்களது பூர்வீக வீட்டில் உள்ள தாய் பழனியம்மாள், தந்தை வேலுச்சாமியிடம் கொடுத்தனர். மேலும் சம்மனை பெற்றதாக செந்தில் பாலாஜியின் தந்தையிடம் கையெழுத்து பெற்றனர். வரும் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு செந்தில் பாலாஜியும் அசோக்குமாரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

தவெக ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏ இளையராஜாவுக்கு ரூ 35 கோடி பேரம் பேசப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி, அசோக்கிற்கு இந்த பேரத்தில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்த கரூர், சென்னையில் இருவரையும் தேடி வந்த நிலையில் அவர்கள் 5 நாட்களாக தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
வரும் திங்கள்கிழமை காலை செந்தில் பாலாஜி, அசோக்கின் வழக்கறிஞர்கள் ஆஜராகிறார்களா, இல்லை அவர்களே ஆஜராகிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.
தமிழக சட்டசபை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவிருப்பதாகவும் அப்போது ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்பட்டால் ரூ 35 கோடி வரை பணம் கொடுப்பதாகவும் தன்னிடம் திமுகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் ஊத்தரங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபரான திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், திருச்சியைச் சேர்ந்த நரேஷ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் சம்பந்தப்பட்ட தவெக எம்எல்ஏவை தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகவோ மிரட்டியதாகவோ எனக்கு எதிராக எஃப்ஐஆரில் எந்த குற்றச்சாட்டுகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு வரும் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக செந்தில் பாலாஜியையும் அவரது தம்பி அசோக்குமாரையும் போலீஸார் தேடி வந்த நிலையில் அவர்கள் இருவரும் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து போலீஸார், செந்தில் பாலாஜியும் அவரது தம்பி அசோக்கும் ஆஜராக சம்மன் கொடுத்துள்ளனர். கரூரில் ராமேஸ்வரபட்டியில் உள்ள பூர்வீக வீட்டில் அவர்களது தாய், தந்தையிடம் அந்த சம்மன் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications