2 மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.. 2 அதிமுக எம்எல்ஏ-க்களும் புறக்கணிப்பு!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தை ஆற்காடு எம்எல்ஏ சுகுமார் மற்றும் ஜோலார்பேட்டை எம்எல்ஏ கே.சி.வீரமணி ஆகிய இருவருமே புறக்கணித்துள்ளனர்.
சமீபத்திய தேர்தல் தோல்விகள் மற்றும் உட்கட்சி மோதல்களுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியைப் பலப்படுத்தவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

இன்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆனால், இந்த முக்கியத்துவமிக்க ஆலோசனைக் கூட்டத்தை இரண்டு சிட்டிங் எம்எல்ஏக்கள் முற்றிலுமாகப் புறக்கணித்திருப்பது கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு உட்பட்ட தொகுதிகளின் முக்கியப் பிரதிநிதிகளான ஆற்காடு எம்எல்ஏ சுகுமார் மற்றும் ஜோலார்பேட்டை எம்எல்ஏ கேசி வீரமணி ஆகிய இருவருமே இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். அண்மையில் தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்ததால், கேசி வீரமணியின் கட்சி பொறுப்பை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.
இதன்பின் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 9 முன்னாள் அமைச்சர்களுக்கு வேறு பொறுப்புகள் அளிக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்து எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும் எடப்பாடி பழனிசாமி இதுவரை மாவட்டச் செயலாளர் பொறுப்பை அவர்களுக்கு அளிக்கவில்லை. இதனால் அதிமுகவின் சீனியர் நிர்வாகிகள் தொடர்ந்து அதிருப்தியில் உள்ளனர்.
இன்னும் சில வாரங்கள் இதே அதிருப்தி நிலவினால், அவர்களின் விஜயபாஸ்கர் பாதையில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையக் கூடும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. இதனால் எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக என்ன முடிவு எடுப்பார் என்பதே அக்கட்சியினரின் கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications