விஜய்க்கு ஆப்பு வைத்த CBFC! 43 செகண்ட் கட்.. 13 இடங்களில் ம்யூட்! ஜனநாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ்?
சென்னை: நடிகரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்துள்ள நிலையில் ஜனவரி மாதத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் பிரச்சினை காரணமாக தற்போது வரை படம் வெளியாகவில்லை. இந்நிலையில் சென்சார் பிரச்சனைகள் முடிந்து தற்போது அந்த படத்துக்கு 'ஏ சான்றிதழ்' வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் 43 நொடிகள் நீக்கப்பட்டு, 13 இடங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகே ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய் தனது கேரியரின் உச்சத்தில் இருக்கும்போது அதனை உதறிவிட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்தார். அக்டோபரில் மாநாடு நடைபெற்றது.

முன்னதாக கட்சி ஆரம்பிக்கும் போதே கடைசி படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலுக்கு வருவேன் என கூறியிருந்தார். அரசியலுக்கு வந்தபோதே அவரது 'கோட்' திரைப்படம் வெளியானது. இதை அடுத்து கடைசி திரைப்படமாக ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்திருந்தார் விஜய்.
ஜனநாயகன்
கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கிய இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
விஜய்யுடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமீதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளனர். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவில், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு பல அனல் பறக்கும் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். படம் ஒன்பதாம் தேதி பொங்கல் விடுமுறை குறிவைத்து களமிறங்கும் என அறிவிக்கப்பட்டது.
சென்சார் சான்றிதழ்
இதனைத் தொடர்ந்து படத்துக்கு விரைவில் சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் சிபிஎஃப்சி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்ற நிலையில் உச்சநீதிமன்றம் வழக்கில் தலையிட மறுத்து, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பியது. அதற்குப் பிறகு படக்குழு வழக்கை வாபஸ் பெற்றதோடு ரிவைசிங் கமிட்டி வழியாக சென்றார் சான்றிதழை பெற தீர்மானித்தது. ஆனால் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் இந்த படத்துக்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
தணிக்கை வாரியம்
இதற்கிடையே சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக விஜய் பொறுப்பேற்றார். அதன் பிறகு படத்தின் தயாரிப்பாளரான வெங்கட நாராயணா தமிழக அரசில் டெல்லி பிரதிநிதியாக பதவி வழங்கப்பட்டது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் இந்த படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகி படக் குழுவுக்கு அதிர்ச்சியை தந்தது. ஆனாலும் படம் எப்போது திரையரங்கில் வரும் என ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.
ஏ சான்றிதழ்
இதற்கிடையே இந்த படத்தை பார்த்த தணிக்கை வாரியம் தற்போது 'ஏ சான்றிதழ்' வழங்கியுள்ளதாகவும் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் படத்தை ஆய்வு செய்த சென்சார் குழு மொத்தம் 13 திருத்தங்களை பரிந்துரைத்துள்ளது. படத்தில் வன்முறை காட்சிகள், ஆபாச மற்றும் தவறான வார்த்தைகள் இடம்பெற்ற வசனங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், சில வார்த்தைகள் நியூட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிராக வாசகங்களை சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
படக்குழு அதிர்ச்சி
மேலும், அதிகளவில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள், உடல் உறுப்புகள் சேதம் அடைவது, வெடிகுண்டு வெடிப்பில் உடல் பாகங்கள் சிதறுவது போன்ற காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 43 நொடிகள் கொண்ட காட்சிகள் நீக்கப்பட்டு படம் இறுதியாக 180 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனாலும் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த படத்தை பார்க்க முடியும். விஜய்க்கு அதிக அளவில் குழந்தைகள் ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில் அவர்கள் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் படக்குழு மேல்முறையீட்டுக்கு செல்லலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.














Click it and Unblock the Notifications