சங்கீதா, விஜய் இருவரும் ஒரே மேடையில்.. மகனின் சிக்மா விழாவில் இதுதான் நடக்க போகுதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சங்கீதா, விஜய் இருவரும் சிக்மா விழாவில் பங்கேற்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து தெரிவித்துள்ளார்.. ஆதவ் அர்ஜுனா தன்னுடைய மேடைப் பேச்சுக்களைத் தவிர்த்துக்கொள்வது நல்லது. கட்சியில் உள்ள மற்ற அமைச்சர்களான ராஜ்மோகன், ரமேஷ், நிர்மல் குமார் போன்றோரின் பேச்சுகளில் ஒரு நளினமும், சரியான ஓட்டமும் இருக்கும், அவர்களின் பேச்சில் வன்மம் தெரியாது. ஆனால், ஆதவ் அர்ஜுனா சாதாரண வார்த்தைகளைக் கடினமாகவும் வன்மையாகவும் உச்சரிக்கிறார் என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

The Gentle Man சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "சிக்மா படத்தின் வேலைகள் முடிவடைந்து, வருகிற 18ம் தேதி அதன் ஆடியோ வெளியீட்டு விழா நடக்க உள்ளதாக தெரிகிறது. இந்த விழாவில் இயக்குனர் ஜேசன் சஞ்சய்யின் பெற்றோர், அதாவது முதலமைச்சர் விஜய், அவரது மனைவியும் ஒன்றாக சேர்ந்து கலந்துகொள்ளப் போவதாகச் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.

Sangeetha

சங்கீதா - விஜய்

பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். கடந்த காலத்தில் முதலமைச்சர் விஜய் மீது நான் கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறேன், இன்றும் வைக்கிறேன், நாளையும் வைப்பேன். இதில் எனக்கு எந்தவித தனிப்பட்ட வன்மமும் கிடையாது.

இன்று ஜேசன் சஞ்சய் யாருடைய உதவியும், தயவும் இல்லாமல் தனித்து நின்று, சர்வதேச தரத்தில் 'சிக்மா' படத்தை உருவாக்கியுள்ளார். இந்த இளம் டைரக்டரின் சிறப்பான செயல்பாடுகள் ஆச்சரியம் தருகின்றன. . இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யும், அவரது மனைவியும் இணைந்து பங்கேற்றால், அது தொண்டர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.

அதுமட்டுமல்லாமல் செங்கல்பட்டு கோர்ட் வழக்கு, உட்பட தனிப்பட்ட வாழ்க்கையை சுற்றியுள்ள அரசியல் ரீதியான நெருக்கடிகளுக்கு இந்த நிகழ்வு ஒரு முற்றுப்புள்ளியாக அமையும். இதன் மூலம், அவர் இன்னும் முழுமையாக, வேகமாக அரசியலில் செயல்பட முடியும்.

ஆதவ் அர்ஜூனா ஆவேச பேச்சு

ஆனால், ஆதவ் அர்ஜுனாவின் சமீபத்திய ஆவேசமான பேச்சுக்கள், தமிழக அரசுக்கும். முதலமைச்சர் விஜய்க்கும் தேவையற்ற சங்கடங்களையும் சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது.

ஆதவ் அர்ஜுனா பொதுமேடையில் மிகவும் ஆவேசமாகவும், வன்மத்துடனும், பழி உணர்வை உமிழும் வகையிலும் பேசியுள்ளார். அப்படி உணர்ச்சிவசப்பட்டு அவர் பேசிய 2 முக்கிய விஷயங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

முதலாவதாக, மேடையில் "நான் கணக்கு வழக்கு தீர்ப்பேன்" என்று பேசியுள்ளார். இந்த வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் இருக்கும்போது, இவர் எப்படி கணக்கு தீர்க்க முடியும்? 2வதாக, கரூர் சம்பவத்தை அரங்கேற்றியதே காவல்துறைதான் என்றும், போலீசாரை பயன்படுத்திதான் இது நடந்தது என்றும் பேசியுள்ளார்.

விசாரணை கமிஷன்

இந்த அரசின் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறது. அப்படியிருக்கும்போது, காவல்துறை மீது சந்தேகம் இருந்தால், ஒரு விசாரணை கமிஷன் அமைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு, பொதுமேடையில் வன்மத்தைக் கக்குவது சரி கிடையாது.

நீதிமன்றம் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் மூலம் சட்டப்படி முறையிட இவ்வளவு வாய்ப்புகள் இருக்கும்போது, பொதுமேடையில் இப்படி பேசுவது அவசியமற்றது. இது இந்த அரசுக்கு ஒரு சங்கடமான சூழலையே ஏற்படுத்தும். முன்னாள் முதலமைச்சர் ஒருமுறை குறிப்பிட்டது போல, எந்த அமைச்சர் எப்போது என்ன பிரச்சனையை உருவாக்குவார் என்ற கவலையான சூழலே நிலவுகிறது.

விஜய் இதை வெளிப்படையாகப் பேசவில்லை என்றாலும், அமைச்சர்களின் நடவடிக்கைகள் அவருக்குப் பெருத்த தலைவலியாகவே அமைகின்றன.

கட்சி தொடங்கி 2 மாதங்களில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு, இந்தியாவில் மிகச் சிறந்த வியூக அமைப்பாளராக விளங்கும் ஜான் ஆரோக்கியசாமியின் அறிவார்ந்த வழிகாட்டுதலின்படிதான் இந்த அரசு இயங்கி வருகிறது.

தவெக அரசு - நம்பர் 2

சிறுபான்மை அரசாங்கமாக இருந்தாலும், அதை தகுந்த நடவடிக்கைகள் மூலம் ஸ்திரமான அரசாக 5 ஆண்டுகள் முழுமையாகக் கொண்டு செல்லும் வேகத்தில் அது பயணித்து வருகிறது.

ஆனால், தவெக அரசுக்குத் தேவையில்லாமல் சர்ச்சைகளையும் சிக்கல்களையும் உருவாக்குவது ஆதவ் அர்ஜுனாவின் வாடிக்கையான வேலையாக மாறிவிட்டது. கட்சிக்குள் தன்னை, நம்பர் 2 என்ற பிம்பத்தைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அவர் அதீத அறிவாளி போலப் பேசி அரசுக்கும் கட்சிக்கும் மக்கள் மத்தியில் ஒருவித வெறுப்பைத் தேடித்தருகிறார்.

ஆதவ் அர்ஜுனா தனது மேடைப் பேச்சுக்களைத் தவிர்த்துக்கொள்வது நல்லது. கட்சியில் உள்ள மற்ற அமைச்சர்களான ராஜ்மோகன், ரமேஷ், நிர்மல் குமார் போன்றோரின் பேச்சுகளில் ஒரு நளினமும், சரியான ஓட்டமும் இருக்கும், அவர்களின் பேச்சில் வன்மம் தெரியாது. ஆனால், ஆதவ் அர்ஜுனா சாதாரண வார்த்தைகளைக் கடினமாகவும் வன்மையாகவும் உச்சரிக்கிறார்.

வன்முறை தூண்டுதல்

தமிழ் மொழியின் வல்லினம், மெல்லினம் போன்ற உச்சரிப்புத் தன்மைகளைத் தெரிந்து மென்மையாகப் பேசாமல், அனைத்தையும் வன்மையாகப் பேசுவதால் அவரது பேச்சு வன்முறையைத் தூண்டுவது போலவே கேட்கிறது. ஒரு பொறுப்பான அமைச்சரின் பேச்சில் இருக்க வேண்டிய கண்ணியம் அவரிடம் இல்லை.

அரசு அமைந்துவிட்டது, அது 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்து மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டுமே தவிர, நீதிமன்றத்திலும் சிபிஐ விசாரணையிலும் இருக்கும் பழைய பஞ்சாயத்துகளைத் தேவையில்லாமல் மீண்டும் கிளறக் கூடாது. கரூரில் கால் பதிப்பதற்காகவே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சட்டப்படி தப்பு இருந்தால் அவர்கள் நீதிமன்றத்தை எதிர்கொள்ளட்டும்.

ஆதவ் அர்ஜுனாவின் இத்தகைய வன்மமான பேச்சுக்கள் மக்கள் மத்தியில் தேவையற்ற வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதுதான் உண்மை. இது விஜய் அவர்களுக்கும், தாவேக்க அரசுக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+